பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்தருணத்தில் பற்றவேண்டியது அவன் திருவடிகளையே! இந்த நிலையிலேயே மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்து, கற்று, முதலமைச்சராகி, அரசுப் பணிகள் செய்து எய்த்துக் களைத்த நிலையிலேயே திருப்பெருந்துறை இறைவனைச் சரண் அடைகின்றார். “எய்ப்பினில் வைப்பு” என்று எண்ணி அடைக்கலம் புகுகின்றார். திருப்பெருந்துறைச் சிவனும் ஆட்கொண்டருள்கின்றான். உயிர்களை இறைவன் ஆட்கொண்டருளிய பிறகு, உயிர்கள் இறைவனின் அடைக்கலப் பொருள்களாகின்றன. பாதுகாப்பது இறைவனின் பொறுப்பு. இங்ஙனம் அடைக்கலப் பொருள்களாகிய உயிர்களைக் காக்கவே திருவிளையாடல்கள்! மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, மாணிக்கவாசகரின் பணிகள் இறைவனின் பணிகளாயின. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைச் சேவகனாகிறான்! கொற்றாளாகிறான். இது நியதி.

பிறவி, நோய் நீக்கத்திற்குரிய மருந்தே யாம்! ஆயினும், தெளிவும் தெளிவினுட் சிவமும் தோன்றும் வரை பிறவி ஒரு வலைதான்! துன்பந்தான்! இந்தப் பிறவி வலையை அறுத்தெறிய முயலுவதே வாழ்க்கையின் நோக்கம்; பயன்! மாணிக்கவாசகர் பழுத்த மனத்தராகிறார். புளியம்பழம் போலத்தான் மாணிக்கவாசகர் தம் வாழ்வியல் அமைந்திருந்தது. ஆதலால், வாழ்க்கை உவர்ப்பாகிறது. இறைவன் திருவடிகளையே பேசுதல் தவமாகிறது; வாழ்வாகிறது.

பிறந்து வினை பல செய்து நுகருமாறு நுகர்ந்து எய்த்துக் களைத்துப்போய் எய்ப்பினில் வைப்பாக என்றும் தனித் துணையாக விளங்கக்கூடிய இறைவன் திருவடிகளைப் பற்றுதலே வாழ்க்கை; வாழ்க்கையின் பயன்!

தனித்துணை நீ நிற்க யான்தருக்
கித்தலை யால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்
டாய் வினை யேனுடைய