பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயலவில்லை! ஆனால், திருவாரூரில் பரவையார் வீட்டு வாயிற்படிகளில் சிவபெருமான் திருவடிகள் தோய்ந்தன. ஆதலால் கடவுள் ஆற்றல்மிக்க அன்புவலையில் படுவோன்; பக்தி வலையில் படுவோன்! இதனைத் திருவாசகம்,

“பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே”

என்பதால் அறியலாம்.

சிவபெருமானின் திருவுருவம் நீதி, சிவனவன் திருநாமம் நீதி என்று உறுதியாகிறது. சிவனைச் சார்ந்த சமயநெறி சிவநெறி. சைவம்- சைவ சமயம் நீதியேயாம்! சைவ நெறியில் கடவுளும் கூடத் தாம் விரும்பியபடி செய்ய இயலாது. ஆன்மாக்களின் தகுதிப்பாடே சிவனின் அருளிப் பாட்டுக்குக் காரணம். ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் முயற்சியை, கருணையை இறைவன் காட்டலாம். ஆயினும் தகுதியுடையதே வளரும்; வாழும். சிவன் அருளைப் பெறும்! திருவாரூர் இறைவனைத் தோழமையாக நம்பியாரூரர் பெற்றது உண்மை! ஆயினும் வாய்மை பிறழ்ந்தபொழுது, சொல் பிறழ்ந்த நிலையில் கண்ணொளியைப் பறித்த வரலாற்றை ஓர்க! உன்னுக!

காரைக்காலம்மையார் தவம் செய்த தவம்! இறைவனாலேயே ‘அம்மை’ என்று அழைக்கப்பெற்ற புண்ணியவதி! ஆயினும் அம்மையின் விருப்பம் பிறப்பறுக்க வேண்டும் என்பது. பிறவி நீக்கத்திற்குரிய தகுதி இல்லையெனில் என்ன செய்வது? இறைவன்தான் என்ன செய்ய இயலும்? ஆதலால்,

“பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்”

என்று அம்மையார் அருளிய குறிப்பினை உணர்தல் அவசியம்! சேக்கிழார்,