பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

135


“செய்வானும் செய்வினையும்
அதன் பயனும் கொடுப்பானும்
உய்வகையால் நான்காகும்
விதித்த பொருள்”

(சாக்கியர். புரா. 5)

என்றருளியதும் இக்கருத்தினையே அரண் செய்கிறது. ஆதலால் எல்லாருக்கும்- கடவுளுக்கும் கூட நீதிமுறை உண்டு என்பது சிவநெறியின் தனித்தன்மை. இறைவன் உயிர்களை ஆட்கொள்வதற்குப் பணிகளை வழங்குவது நீதிக் குணமேயாகும்.

மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தார். அரசாணையை நிறைவேற்றுதலே அமைச்சருக்குரிய பொறுப்பு; கடமை! இதில் நீதி சார்ந்தவைகளும் இருக்கலாம். நீதி சாராதவைகளும் இருந்திருக்கலாம். வரிப் பணத்தில் குதிரைகள் வாங்கப் போனது நீதிக்கு முரண்தானே! பணியாளர் - அமைச்சர் என்ற பொறுப்பின் வழி மன்னன் ஆணையை நிறைவேற்ற வேண்டியது அமைச்சரின் பணி. மாணிக்கவாசகரின் பணி, இந்தப் பணியை விலக்கிக் கொண்டது அரசியல் ரீதியில் நீதியாகாது; அறநெறி அடிப்படையில் நீதியாகும். குதிரை வரும் என்று சொன்னதும் நீதிக்கு முரனேயாகும். ஏன்? பரிகள் நரிகளாகியதும் நீதிக்கு முரண்தானே! இந்த நிகழ்வினை மாணிக்கவாசகர் சிந்தித்துப் பார்க்கிறார்? அதனால்,

“நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்”

என்று கூறுகின்றார். மாந்தரில் சிலர் இயல்பாகவே நன்னெறி நிற்பர். நீதியைச் சார்ந்து ஒழுகும் சான்றோரின் உறவு கிடைத்தால் அவர் தம்முடன் உள்ள கூட்டத்தின் தாக்கமாக நன்னெறி நிற்கும்- நீதியைச் சார்ந்தொழுகும் பெற்றிமையும் கிடைக்கும். மாணிக்கவாசகர் இயல்பாக நீதியை நினைக்க வில்லையாம்! நீதியை நினைப்பவருடன் கூடாமல் அரசு அதிகாரத்தைச் சார்ந்தவருடன் கூட்டு ஏற்பட்டு