பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

147


யாட்டினைக் கருதி இறைவன் புதுமையாகவும் விளங்குகிறான். காலத்தினால் விளையும் மூப்பு, முதுமை, கிழட்டுத்தனம் இல்லாமல் என்றும் இளையோனாக, கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாக விளங்கி அருள்கின்றான்.

காலம் மிகமிகக் கொடுமையானது; கண்டிப்பானது. காலத்தொடு பட்டவையெல்லாம் மூப்படையும்; கிழட்டுத் தன்மையடையும்; பயனற்றுப் போகும். காலப்போக்கில் ‘அழியும்’ காலத்தத்துவம் நிகழ்காலம் எதிர்காலம் என்பதை விட விரைந்து இறந்த காலமாதல்தான் இயல்பு. திருக்குறள்,

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”

என்று கூறும். ஆனால், இறைவன்- சிவபெருமான் காலாதீதனாய் இருப்பதால் அவன் புதுமை தாங்கியவனாகப் புதுமைப் புனைவுடன் விளங்க முடிகிறது. ஆன்மாக்களின்-உயிர்களின் விருப்பம் புதுமை வேட்டல். ஆன்மாக்கள்-உயிர்கள் விரும்பும் புதுமை, புத்தொளி கிடைக்காது போனாலும் அவை எய்த்துக் களைத்துப்போகும். ஆதலால் ஆன்மாக்களின்- உயிர்களின் வளர்ச்சி கருதி, நலம் கருதி, இறைவன்- சிவன் நாழிகைதோறும் புதுமைப் புனைவாளனாக விளங்குகிறான். ஊழிதோறும் இறைவனுடைய திருமேனிகள் மாறுகின்றன; பெயர்கள் மாறுகின்றன. ஏன்? அவன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் கூட மாறுபடுகின்றன! எனவே, இறைவன் பழைமைக்குப் பழைமையானவன்? ஆம்! அது உண்மை! ஆயினும் பின்னைப் புதுமைக்கும் பற்றுக் கோடாக விளங்கி அருளுகின்றான்! புதிய புதிய கணக்கிலாத கோலங்காட்டித் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்; ஆட்கொண்டருள் செய்கின்றான். இன்றையப் புதுமை மட்டுமல்ல. இனி எதிர் வருங்காலத்தும் புதுமையாகவும் இறைவன்- சிவன் விளங்குவான். இது உண்மை! எது நாளும் புதுமை நலம் பெறுகிறதோ அது அழிவற்றது; ஆக்கம் தருவது.