பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4


திட்டங்கள் செயற்படுத்தப்படும். நாயன்மார்களின் அடிச்சுவட்டில் அவர்களின் தொண்டு வாழ்வியல் மீண்டும் நடைமுறைக்குக் கொணரத் திட்டம் செயற்பட்டது. சமயத்தை இயக்கமாக, வாழ்வியலாக மாற்றுகின்ற முயற்சியில் சிறப்பாகச் செயற்படுத்தினார்கள். உழவாரக் கருவி ஏந்தித் தமிழகம் முழுவதும் உலாவந்தார்கள். உழவாரக் கருவி திருக்கோயில்களில் முளைத்த முட்புதர்களை மட்டும் களையவில்லை. சமுதாயத்தில் முளைத்திருந்த முட்புதர்களையும் களைந்தது.

சமய இலக்கியம் வெறும் தத்துவ நூல் அல்ல. அனுதினமும் சமயத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்திய அனுபவசாரம், ‘அப்பர் விருந்து’ என்ற நூலில் முழங்காலுக்கு மேல் வேட்டி உடுத்தி, உருத்திராக்க மாலை அணிந்த பழைமையான தோற்றத்திற்குரிய அப்பர் பெருமானின் புதுமைச் சிந்தனையைப் புதிய கோணத்தில் சமய உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்! என்னே புதுமை. இதோ, பானைச் சோற்றுக்குப் பதச் சோறுபோல், அப்பர் பெருமான் பாடலுக்குப் புதிய விளக்கம்.

”மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!”

என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்! இந்தப் பாடலுக்குப் புதிய விளக்கம்! குற்றமற்ற வீணையின் இனிய கீதத்தை எல்லோரும் கேட்டு மகிழலாம். தேவையான நிபந்தனை நம் காதுகளுக்குக் கேட்கின்ற சக்தி வேண்டும், மாலைக் காலத்து அழகிய நிலவை எல்லோரும் பார்த்து மகிழலாம். அதற்குத் தேவையான நிபந்தனை நம் பார்வையில் குறைபாடு இல்லாது இருக்க வேண்டும். வீசுகின்ற தென்றல் காற்று எல்லோருக்கும் பொதுவானது. ஆண்டவனுக்கும் பொதுவானது; அடிமைக்கும் பொதுவானது, அதைப் போலவே பரம்பொருள் எல்லோருக்கும் பொதுவானது, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பாக, எல்லோருக்கும் பொதுமைப் பொருளாக இறையின்பத்தை அடையாளம் காட்டினார்.