பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுதும் அழுக்காவது இல்லை. அறிவு அறியாமையை அகற்றும்.

சிவம் - சக்தி பொருளும் ஆற்றலும் போல, நெருப்பும் சூடும் போலப் பிரிக்க ஒண்ணாதது. உலகுயிர்களுக்கு உள்ளே வேட்கை, துய்த்தாலொழிய நீங்காது. வேட்கை நீங்கினாலே விடுதலை. துய்த்தலுக்குரிய விருப்ப உணர்வைத் தருபவள் அன்னை பராசக்திதான். அதனாலேயே அன்னை பராசக்தி தன் கையில் கரும்பை ஏந்தியிருக்கிறாள். அன்னை பராசக்திக்குக் காமாட்சி என்ற திருநாமமும் வந்தது. இறைவன் சிவன்- உலகுயிர்கள் எல்லாம் போகம் துய்த்து அவ்வழி நிறைநலம் எய்துதல் வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்பினாலேயே அம்மையப்பனாக- போகத் திருமேனியுடையவனாக இருக்கின்றான். இப்புவியில் வாழும் மாந்தரும் விலங்கு முதலிய சிற்றுயிர்களும் ஆண்- பெண் என்று காதலில் கூடி இன்புற்று வாழ்கின்றனர். இவ்வின்ப வாழ்க்கைக்குத் தூண்டுவதே சிவபெருமானின் திருவுள்ளம்! அன்னையாகிய சிவையின்பால் நோக்குதலே மணம்!

உயிர்க்குலம் பரிணாம வளர்ச்சியில் வளரவும் பலருக்குப் பயன்படவும் உய்தி பெறவும் காதலிருவர் கூடி வாழ்தல் திருமணம் என்று கூறப்பெறுகிறது. ஆதலால் சைவத் தமிழ் மரபில் இறைவனை அம்மையப்பனாக வழிபடும் மரபு தோன்றி வளரலாயிற்று. “பெண் சுமந்த பாகத்தன்” என்றதால் சிவன் தனக்காகப் பெண்ணைச் சுமக்கவில்லை. உயிர் குலத்தின் நன்மை கருதியே சுமத்தலால் ‘சுமந்த’ என்றருளியுள்ள நயமும் உணர்க.

எனவே, தமிழ் மக்கள் சிவனை மங்கை பங்கினனாகவே வழிபட்டு வந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் திருமேனி மங்கை பங்கினன் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. மாணிக்கவாசகர்,