பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

155


தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
ஆலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

என்று பாடுகின்றார். அம்மையப்பர் திருக்கோலம் தொன்மைக் கோலம் என்று பாடுகின்றார். பழைமை வாய்ந்த சாத்திர நூலாகிய திருக்களிற்றுப்படியார்,

“அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்”

என்று போற்றுகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து,

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!

என்று போற்றுகிறது. திருமுறைகள் முழுதும் “பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்த கோலமே” போற்றிப் புகழ்ந்து பேசப்படுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற திருக்குறளில் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் சொல். சக்தியைப் பாகத்தில் உடையது பரம்பொருள் என்று இதற்கு ஒரு சைவ மரபு உரை உண்டு. சிவபெருமானை அம்மையப்பனாகவே சிந்தனை செய்தல் வேண்டும். வழிபடுதல் வேண்டும் என்ற மரபு வழி வழி பின்பற்றப்படுகிறது. சிவபெருமானும் அருளிச் செயல் நிகழும் போதெல்லாம் பெண் சுமந்த பாகத்தனாகவே எழுந்தருளி அருள்பாலித்துள்ளான். “பெண் சுமந்த பாகத்தன்” என்று போற்றுவது உலகியல்; தமிழ் மரபு.