பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இறைவா, என்னைப்
பணிகொள்வாய்!

கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் புதியதல்ல. பழைய கொள்கை. சமய நூல்களில் கடவுள் மறுப்புக் கொள்கை உலகாயதம் என்ற பெயரில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. கடவுளை மறுத்தல் எளிது. கடவுளை நம்புதல் கடினமான கொள்கை. கடவுளை நம்பவேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும். கடவுள் நெறியில் நடத்தலுக்குரிய திண்மை வேண்டும். இடர்ப்பாடுகளைக் கடந்தும் கடவுளை நம்புதல் வேண்டும். ஆதலால் கடவுளை நம்பும் கொள்கை. அக்கொள்கை வழி வாழ்தல் அருமைப்பாடுடைய முயற்சியின் பாற்பட்டது.

அதுபோலவே கடவுள் நெறியில் நின்று வாழ்தலே வழிபாடு. வழிபாடு என்பது உயர் கொள்கை. வழிப்படுதல் என்ற சொல்லே வழிபாடு ஆயிற்று. இறைநிலை இயக்கம்; ஓயாத இயக்கம்; இடையீடின்றி இயங்கும் இயக்கம். இயக்க நிலையில் ஐந்தொழில்கள் நடக்கின்றன. படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் நடத்தும் முதல்தரத் தொழிலாளி- உழைப்பாளி இறைவன். இறைநெறியில் நிற்போருக்குப் படைப்பாற்றல் வேண்டும் இறைவனிடம் உள்ள படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாவரங்களின் ஒளிச்சேர்க்கை போன்றதே இறைவனிடம் ஆன்மா நடத்தும் ஞானச்சேர்க்கை. இறைவன் தந்த உலகைக் காக்கவேண்டும். நாளும் தீமைகளுடன் போராடி நல்லவற்றை நிலைநிறுத்த வேண்டும். நன்றல்லாதவற்றை மறக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளாக்கம் கண்டு வாழ்வித்து வாழ்தல் வேண்டும். இதுவே சமய வாழ்க்கை. கடவுள் எல்லாம் செய்வார் என்று வாளாகிடத்தல் இறைநெறி சார்ந்த வாழ்க்கையன்று.