பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நீயோ, பெரியோன்! பிறவா யாக்கைப் பெரியோன்! நீ என் வினைகளைப் பொறுத்தாட் கொள்ளுதல் கடமை! நானாக ஒன்றும் செய்யவில்லை! என் வினைகள் என்னைப் பொய் நெறியில் இழுத்துச் சென்றன! ஆனாலும் நான் நாய்! சிறு நாய்! நீ ஆட்கொண்டருளினால் உன்னை நினைந்தே வாழ்வேன்! மறவேன்! பெரியோனாகிய நீ என் பிழை பொறுத்து என் வினைத் தொகுதியை ஒறுத்து என்னை மீட்டு எடுத்து ஆண்டுகொள்! என்று உருகுகிறார் மாணிக்கவாசகர்.

இறைவா, முன்பே ஒருதரம் ஆட்கொண்டாய்! குருந்த மரத்தடியில் ஆட்கொண்டருளினை! அப்போது நான் என் உயிரையே உனக்கு அர்ப்பணிப்புச் செய்தேன்! உரிமைப் படுத்தினேன்! என்னுடைய உடலையும் உனக்கே உரிமைப்படுத்தி உன்னுடைய அடிமையானேன்! அடிமைக்கு ஆர் என்று கூக்குரலிட்டேன். அடிமைக்கு உடைமைகள் ஏது? ஏன்? எதற்கு? ஆதலால் என்னுடைய உடைமைகளையும் உன்னிடமே ஒப்படைத்தேன்! நீ அவற்றையெல்லாம் ஆட்கொண்டபோது கொள்ளவில்லையோ? நீயே என் தலைவன்! நீயே என் ஆண்டான்! நான் அடிமை! இன்று எனக்கு ஓர் இடையூறு உண்டா? இடையூறு வரலாமா? ஆனால், இடையூறு வந்திருக்கிறது; வந்து கொண்டிருக்கிறது. தமக்கு அன்பு பட்டவர் பாரம் சுமப்பதற்கென்றே எட்டுத் தோள்களை-வலிமை மிக்க தோள்களைக் கொண்ட பெருமானே! உனக்கு என்னுடைய அல்லல்கள் தெரியவில்லையா? தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறாயே! என்று நெக்குருகப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ