பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வினைகள் என்னை மொய்க்கின்றன. அவா, வெள்ளம் போல் வந்து தாக்குகிறது! இறைவா, இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆட்கொண்டருளிய நீ, துன்பத்திற்குக் காரணமாகிய உடலை அகற்றாமல் வைத்து வாழவைத்து விட்டாய்! உடல் உள்ள அளவும் மலவாசனை இருக்கத்தானே செய்யும்! வினைகளும் நீங்கா இறைவா! என்னை ஆட்கொண்டருளிய நீ என் உடலை நீக்காதது ஏன்?

இறைவா, இன்று என் பிழைகளை எண்ணி வெட்கப்படுகின்றேன்; வருத்தமுறுகின்றேன் ஆட்கொண்டருளிய உன்னையும் பிரிந்துவிட்டேன்! திருப்பெருந்துறை சிவனே! நான் பொய்ம்மையுடையேன். ஆயினும் பெரியோனாகிய நீ கருணையினால் என் உடல் புகுந்து இடம் பிடித்து ஆட்கொண்டருளினை! ஆயினும் நின் கருனைப் பெருவெள்ளத்தை நினைந்து நினைந்து அழுகின்றேனில்லை. இரும்பின் பாவையனைய நான் ஆண்டருளிய நின்னைப் பிரிந்தேன்! அல்லல்களுக்கு ஆளானேன்! ஆயினும் செத்துப் போனேன் இல்லை! மண்ணில் வாழ்கின்றேன்! விழித்துக் கொண்டிருப்பதாக எண்ணினேன்! பாவித்தேன்! என் உள்ளக் கருத்தை மனத்துள் நின்ற கருத்தை இழந்தேன்! விழித்திருந்தும் இறந்த மூடர்களை இந்த உலகில் கண்ட துண்டா? என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கின்றேன்! இறைவா! இனியும் பொறுக்க இயலாது! விடைப்பாகா! உழுத பயனை ஊரவர் உண்டு மகிழ, வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கிடையை வாகனமாக உடையவனே! உன்னைப் பிரிந்து இனிது இருக்க ஒருப்படேன்! அதனால், இறக்கவும் மாட்டேன்.

இறக்காமையால் தானே மீண்டும் மீண்டும் அல்லல்! இறைவா, உடலை நீங்காது வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றினை! அப்புறம் ஏன் துன்பங்களைத் தந்து ஒறுத்திடுகின்றாய்! இறைவா நீ என் உடலை ஒறுத்திடுதல் நன்றோ! நான் உய்வதற்கு என்னை ஒறுத்திடுதல் மட்டும் போதுமா?