பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

169


சிவாச்சாரியார்கள் திருவுருவங்களில் இறைவனை (ஆவாகனம் செய்து) எழுந்தருளச் செய்து வைத்தனர். அவ்வாறு எழுந்தருளச் செய்தபின் பக்தர்கள் நேரிடையாக மூர்த்தியின் திருமேனி தீண்டிப் புனலும் பூவும் சொரிந்து வழிபடவும், அனைத்து உச்சிமோந்து வழிபாடியற்றவும் உரிமைகள் இருந்தன. தானே வழிபாடியற்றுதல்தான்-செய்வதுதான் நல்ல வழிபாட்டுப் பயிற்சி முறை. இந்த வழிபாட்டு முறையில்தான், ‘கண்ணப்பர்கள்’ தோன்ற முடியும். நாடு முழுதும் உள்ள திருக்கோயில்களின் வரலாறுகளைப் படித்தால் இந்த உண்மை புலனாகும். திருமுறைகளில், பக்தர்கள் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபாடியற்றினர் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. அப்பரடிகள் பாடிய திருவையாற்றுப் பதிகத்தில் வரும்,

“போதொடு நீர் சுமந் தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்”

என்ற அடியை நினைவு கூர்க.

பக்தர்கள் அனைவரும் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபடும் உரிமை இன்றும் வடபுலத்தில்- காசி முதலிய திருத்தலங்களில் நடைமுறையில் உள்ளது. இதனால் என்ன குறை வந்துவிட்டது? சம்பிரதாயம் என்ற பெயரில் பொருட்பற்றிச் செய்யும் பூசையை மட்டுமே வளர்த்து அன்பையும் அன்பைப் பற்றாகக் கொண்டு செய்யும் வழிபாட்டையும் புறத்தே தள்ளி, இறைவனிடமிருந்து பக்தர்களை அந்நியமாக்கினால் என்ன செய்வது? காலப் போக்கில் மக்கள் திருக்கோயில்களிலிருந்து விலகுவர். திருமுறை ஆர்வலர்கள் சிந்தனை செய்க!


கு.இ.VIII.12.