பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குறிக்கோள் சார்ந்த வாழ்வு

தஞ்சை மாவட்டத்தில் மண்ணியாற்றங்கரையில் திருச்சேய்ஞலூர் என்ற ஒரு சிற்றூர் உள்ளது. இயற்கை வளங்கொழிக்கும் ஊர் அது. வேத ஆகம சாத்திரங்கள் பயின்ற அந்தணர்கள்- நித்திய வேள்வி இயற்றும் சீலமுடைய அந்தணர்கள் பலர் வாழ்ந்த ஊர். திருச்சேய்ஞலூர்க் கிராமத்தில் வேள்வி குண்டப் புகை அணைந்ததே இல்லை.

இந்த ஊரில் எச்சதத்தர்- பவித்திரை என்ற தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளையின் திருநாமம் விசாரசருமர். அவர் இளமையிலேயே வேதங்களில் ஆறங்கங்களில், சைவாகமங்களில் வியக்கத்த்க்க அறிவு பெற்றிருந்தார். விசாரசருமருக்கு முறைப்படி முப்புரி நூல் அணிவித்தல், வேதங்களில் பயிற்சி தொடங்குதல் முதலிய சடங்குகள் நடைபெற்றன. விசாரசருமர் வாழ்க்கையின் இயல்பையும் குறிக்கோளையும் உணர்ந்தார். சிவத்தைப் பூசிக்க வேண்டும் என்று தெளிந்தார்; அறிந்து கொண்டார்.

ஒருநாள் மண்ணியாற்றங்கரையில் தன்னையொத்த பிள்ளைகளுடனும் பசுக் கூட்டத்தினுடனும் சென்ற பொழுது ஒரு பசு தன்னை மேய்ப்பானை முட்டப் போயிற்று. மேய்ப்பான் தற்காப்பு அடிப்படையில் அந்தப் பசுவைக் கண்டபடி அடித்துவிட்டான். இது கண்ட விசாரசருமர் மிகுந்த வேதனையுற்று மேய்ப்பானிடமிருந்து அடிபட்ட பசுவை மீட்டார். “பசுவை அடிக்கலாமா? நாளும் பால் சொரிந்து உயிர்க் குலத்தையும் பூசை முறைகளையும் வளர்க்கும் பசுவல்லவா? பசுவின் உடம்பே புண்ணியத்தின் புதையல்” என்றெல்லாம் அறிவுரை கூறினார், அதுமட்டுமின்றி, “இனி நீ பசுக்களை மேய்க்க வேண்டாம், நானே மேய்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அந்த அந்தணச் சிறுவர் பசு மேய்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். செய்யும் தொழிலுக்குச் சாதிகள் தடையில்லை என்பது பழைய மரபு.