பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

171



அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பொறுப்பை விசாரசருமர் சிறந்த முறையில் செய்தார். பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தன. நிறைய பாலும் கொடுத்தன. விசாரசருமர் பசுக்களை மிக நன்றாக வளர்த்தமையால் பசுக்கள் தாம் ஈன்ற கன்றுகளைப் பிரிய நேரிட்ட பொழுதும் வருந்தவில்லை; ஆனால் விசாரசருமரை ஒரு நொடிப் பொழுதும் பிரிய ஒருப்படவில்லை. விசாரசருமரை நினைத்தாலே பால் பொழியும் அளவுக்குப் பசுக்களின் நிலை வந்துவிட்டது. தாமே பசுக்கள் பொழியும் பாலைச் சிவபெருமானுக்கு முழுக்காட்ட விசாரசருமர் எண்ணினார். ஆதலால் மண்ணியாற்றின் மணலில் ஒரு சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளச் செய்து அந்த மூர்த்திக்கு, பசுக்கள் தாமே பொழிந்த பாலைத் திருமுழுக்காட்டினார். இது நாள்தோறும் நடைபெறும் பழக்கமாயிற்று. இங்ஙனம் பால் சுரந்தமையால் வீட்டிலும் பசுக்கள் தந்த பால் குறையவில்லை. இருப்பினும் ஊர் சும்மா இருக்குமா? ஒருவன் விசாரசருமர் சிவத்தினை எழுந்தருளச் செய்து பால் முழுக்காட்டுவதைப் பசுக்களுக்குரிய அந்தணர்களிடம் கூறிவிட்டான். அந்தணர்களுக்கு யாதொரு இழப்பும் இல்லை. அவர்களுக்குக் கறந்த பாலில், யாதொரு குறைவும் இல்லை. அப்படியிருந்தும் சபையில் விசாரசருமரின் தந்தையை அழைத்து, விசாரசருமரின் அடாத செயல் பற்றிக் கூறினர். விசாரசருமரின் தந்தை எச்சதத்தர் தவறு நிகழ்ந்திருக்காது என்றும் அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் உறுதி கூறினார்.

மறுநாள் விசாரசருமர் வழக்கம்போல் பூசையில் அமர்ந்தார்; பூசை செய்தார். தம்முன் எழுந்தருளியிருந்த இறைவனுக்குப் பால் முழுக்காட்டினார். இச்செயலை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தர்- விசாரசருமரின் தந்தை வெகுண்டு தடித்த கோலினால் விசாரசருமரை அடித்தார். விசாரசருமரின் சிவயோகம் கலைய