பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அது பழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே

(திருப்பள்ளியெழுச்சி-7)
நல்லவர் பேச வேண்டும்!
அல்லவர் ஏச வேண்டும்!

மாணிக்கவாசகர் பல்வேறு அனுபவங்களைச் சந்தித்தவர் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்கள் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் அருமையிலும் அருமை. அமைச்சுப் பொறுப்பிலிருந்த போதும் அந்தப் பொறுப்பை- பதவியைக் கடமையாகவும் பாரமாகவும் கருதினாரேயன்றி மகிழ்ச்சியாகக் கருதவில்லை.

ஆட்சிப் பொறுப்பு எளிதன்று; பொறுப்பு மிகுதியும் உடையது! மழை பெய்யவில்லையா? ஆட்சிக் காவலின் பிழையே என்பர் சான்றோர். பசி பட்டினியால் சாவா? இரந்து பிழைத்தலா? அனைத்துக்கும் காரணம் ஆட்சியே என்று கூறுவது மரபு. இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவன் வாயிலாக ஆட்சி துன்பம் தரும் தகையது என்று கூறுவார்.

“மன்பதைக் காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்”

என்பது சிலப்பதிகாரம்.