பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

185



இன்று ஆட்சி சுகத்திற்குரியதாக விளங்குகிறது. இன்று அரசியல், ஆட்சி அனைத்தும் ஈட்டத்திற்குரியனவாகும். சுகானுபவத்திற்குரியனவாகவும் விளங்குகின்றன. இன்று Power Corrupt என்பது பழமொழியாகவே விளங்குகிறது.

ஆட்சிக்குரியவர்கள் எப்படி விளங்க வேண்டும் என்பதற்குக் கம்பனில் ஓர் உதாரணம் கிடைக்கிறது. இராமன் வசிட்டனது இல்லத்திற்குச் சென்று படித்துவிட்டு வருகிறான். அன்று மாணவர்கள் ஆசிரியரைத் தேடிப்போன காலம்! இன்றோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடிப் போகிறார்கள்! இராமன் வசிட்ட முனிவர் இல்லத்திலிருந்து வருகிறான். சாலையில் இரு மருங்கிலும் மக்களைப் பார்த்த இராமன் இரதத்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கிப் போய்,

“எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எதுவினை? இடர்இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர் கொல்?”

என்று வினவியறிகிறான். ஆக, என்ன தெரிகிறது? இல்லங்கள் தோறும் நலமமைந்த வாழ்க்கை தேவை; இன்றியமையாத் தேவை. அதற்கு அரசு உறுதுணையாக அமைதல் வேண்டும். உங்கள் பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கின்றார்களா? என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் இராமன் கேட்கிறான். இன்றோ ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் வேலி! ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் குண்டு துளைக்காத கார்கள்! காவலர்களின் அணிவகுப்பு! ஆனால், அன்று நடப்பது முடியாட்சி; இன்று நடப்பது குடியாட்சி! மக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையே இடைவெளி குறையும்போதே நல்லாட்சி அமைய இயலும்.

கு.இ.VIII.13.