பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

201


தன்னலத்தால் மூடப்பெற்ற ஆன்மாக்கள் சமூகத்திற்குப் புறம்பாம்; அறநெறிக்குப் புறம்பாம்.

இன்ப நெறிக்கு இடையூறு காமமும் சினமும் பொய்யும்! இவை மனிதனை, மனிதக் கூட்டத்திலிருந்து பிரித்துப் புறத்தே தள்ளுகின்றன. புறம், சன்மார்க்கத்திற்கு இசைந்தது அல்ல. ஆன்மா, புறத்தே தூக்கியெறியப்படாதிருக்க வேண்டுமானால் நன்னெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். அவையாவன: ஒப்புரவறிதல், அடக்கம், பொறுமை, சினம் காத்தல் முதலியன. சத்தியத்தையும் நடுவு நிலையையும் பேணுக. புறத்தே தள்ளப்படாமல் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமா? சொர்க்கத்தின் கதவு திறக்க வேண்டுமா? நீ, அறநெறி பற்றிப் பேசுவதை நிறுத்து; அறநெறியில் நட! நீ, அறநெறியில் நடக்க முயன்று வெற்றி பெற்றுவிட்டால் புறமே இல்லை. நீ வாழும் இடமே சொர்க்கம்.

மாணிக்கவாசகர் “புறமே போந்தோம் பொய்யும் யானும்” என்கிறார். ஆம், உண்மை! பொய், சொர்க்கத்திற்குள் புகமுடியாது. அது மட்டுமல்ல. இப்புவிக் கோளத்தில் பொய் வெற்றி பெறாது; நிலை நிற்காது. மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகளில் பொய் ஒன்று என்பது மாணிக்கவாசகரின் கருத்து. அதனால் “பொய் தான் தவிர்த்து” என்றார். பொய் என்றால் என்ன? வள்ளுவத்தின் அடிப்படையில் விரிந்த அடிப்படையில் பொய்க்குப் பொருள் கொண்டால் குற்றம் அல்லது நலம் பயப்பனவாக இல்லாதன எல்லாம் பொய் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆதலால், பொய் என்பது, மெய் அல்லது உண்மைக்கு எதிரிடையானது என்று பொருள் கொள்ள இயலாது. தீமை செய்யாது நன்மை செய்தல் இவற்றுடன் பொய்யாமையை உடன் வைத்து எண்ணுகிறது பகவத்கீதை. “பாவம் இயங்க அதன் கைப்பிடியாகப் பயன்படுவது பொய்” என்றான் ஜேம்ஸ்.

கு.இ.VIII.14.