பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொய், நஞ்சு; இல்லை! பொய் நஞ்சினும் கொடியது. மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டுப் பொய்யை மறுத்தே வந்துள்ளனர் உலக சிந்தனையாளர்கள். சில நாடுகளில் பொய்க்கு எதிரான சட்டமே இயற்றியிருக்கிறார்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பொய் சொன்னதாக நிரூபிக்கப் பட்டுவிட்டால் பொய் சொன்னவர்களின் நெற்றியில் நெருப்பில் பழுத்த இரும்புக் கம்பியால் சூடு போடுகிறார்களாம். நமது நாட்டில் சொல்வன்மையால் பொய்யை மெய்யாக்கிவிடுகிறார்கள். மனிதன் வளர, வளர அவனுடைய பொய்யும் வளருகிறது என்பது மாணிக்கவாசகரின் கருத்து. “பொய்மையே பெருக்கி” என்கிறார். பிறந்தவுடன் குழந்தைகள் பொய் கூறுவதில்லை. கூறவும் தெரியாது. ஆனால் வயது வளர, வளர வீடுகளும் வீதிகளும் குழந்தைகளுக்குப் பொய்யைக் கற்றுத் தந்துவிடுகின்றன. அதனால், திருக்குறள் “வாய்மை” என்று ஓர் அதிகாரமே இயற்றியது.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”

(297)

என்பது திருக்குறள்.

பொய்யைத் தவிர்க்க என்ன வழி? நாட்டில் செங்கோல் தழுவிய ஆட்சி இருக்க வேண்டும். இன்றைய ஆட்சிமுறையில் பொய்க் கணக்கு, இரண்டாம் கணக்கு என்றெல்லாம் பகிரங்கமாகவே பேசப்படுகின்றன. கருப்புப் பணம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், எங்கும் பொய் அரங்கேறுகிறது. கொடுங்கோல் அரசு அகற்றப் படவேண்டும். பொருள் ஈட்டவும், வைத்துக்கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். கொடுங்கோன்மை அகன்றால் மட்டும் போதாது. ஆற்றல் வளர வேண்டும். ஆற்றல் பெற்றவர்கள் தற்காப்புக்குப் பொய்யைக் கருவியாகப் பயன்படுத்துவது இயற்கை சத்தியம் சாகாது.