பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் முறைபிறழ அறிந்து கொள்ளுதலே அறியாமை.

இருள், பொருளைக் காட்டாது. ஒரோவழி காட்டினாலும் உள்ளவாறு காட்டாது. இதுபோல அறியாமை ஆன்மாவைப் பற்றிய இருள். இது ஆன்மாவுக்கு நல்லன காண, நல்லன கேட்க வாய்ப்பளிக்காது; வாய்ப்பளிக்காதது மட்டுமல்ல- தடுக்கும். இந்த அளவில் அந்த இருள்-அறியாமை நின்றால் பரவாயில்லை. தீச்செயல்களைச் செய்யத் தூண்டும்; துணை போகும். அத்தீச் செயல்கள் பிறவிக்கு வித்தாக அமைந்துவிடும். பிறவியின் நோக்கம் செயல். ஆனால் அச்செயல்- வினை இருள்சேர் இரு வினையாக அமையாமல் ஒளி சேர் வினையாக, வாசனையாக அமையாத செயலாக- வினையாக அமைதல் வேண்டும்.

பிறவியின் நோக்கம் இருளை அகற்றுதல். இருள்சேர் இருவினையிலிருந்து விடுதலை பெறுதல்; குறைவிலிருந்து நீங்கி நிறைவைப் பெறுதல்; குற்றங்களின்றும் விடுதலை பெறுதல்; குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்ளல்; சிந்தையிலும் செயலுறுப்புக்களிலும் பூட்டப் பெற்றுள்ள விலங்குகளை உடைத்து விடுதலை பெறுதல்; பரிபூரணனுக்கு அடிமையாதல் முதலியனவாகும். இப்படிப் பிறவியின் நோக்கம் நிறைவேற, முதலில் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும். அறியாமை அகலுதலைத் ‘தெளிதல்’ என்று தேவாரம் கூறும்

“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினும் சிவமுமாகி” என்று அப்பரடிகளும், “தெய்வத் தெளிவின் தெளிந்தோரப் பேணுமின்!” என்று இளங்கோவடிகளும் அருளியுள்ளமை உணரத்தக்கன. துன்பங்களிலிருந்தும் துன்பத் தொடக்குகளிலிருந்தும் அறவே விலக வேண்டுமானால் இறைவனின் திருவருள் தேவை.