பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவினை உணர்த்தினான் திருப்பெருந்துறை சிவன். மாணிக்கவாசகருக்கு இறைவன் “மேல் நெறியெலாம் புலமாக்கிய” பண்பினை வியந்து பாடுகின்றார்; பரவுகின்றார். வெட்ப தட்பம், பயம் முதலியனவற்றிலிருந்து விடுதலை தந்து, பாதுகாப்புத் தருவது மண்ணகத்து வீடு. அதுபோல ஆன்மா, ஆணவ வெப்பத்திலிருந்து விடுதலை பெற்று மாசில் வீணையாக, மாலை மதியமாக, வீசு தென்றலாக, இளவேனிலாக விளங்கும் இறைவன் திருவடிகளில் தங்கிப் பாதுகாப்புப் பெறுதல் வீடு. இந்த வீடு பற்றிய அறிவினை, உணர்வினை, அனுபவத்தினை மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவன் அருளிச் செய்தனன். இறைவனைத் தாயிற் சிறந்த தயாவுடையான் என்று போற்றும் மாணிக்கவாசகர், அறிவு தந்து ஆட்கொண்டு அருளிய இறைவனை- சிவனை ‘எந்தை’ என்று போற்றுகின்றார். அறிவு தரும் பொறுப்பும் கடமையும் தந்தைக்கே உண்டு என்பதால் இங்ஙனம் கூறினார்.

அறியாமை அகன்று விட்டது. இருள்சேர் இரு வினையும் இல்லை. என்றும் பிரிவிலா அருளும் கிடைத்துவிட்டது. ஆயினும் வேம்பு தின்ற புழுப்போல, எலும்பு கடித்த நாய்போல மீண்டும் ஆன்மாவின் நெஞ்சு கீழ்மை நோக்கியே அழைத்துச் செல்ல விரும்புகிறது. நெஞ்சு போராடுகிறது. ஆன்மாவின் நலத்துடன் ஆன்மாவின் விருப்பத்திற்கு மாறாக நெஞ்சு மாறுபடுகின்றது. தன்னுடன் மாறுபட்டு நின்று போராடும் நெஞ்சை, திருஞானசம்பந்தர் சரிக்கட்டித் தன் வழிக்கு அழைக்க முயற்சி செய்து வெற்றி பெற்றார்.

“நீ நாளும் நினைவாய் நன் நெஞ்சே
சா நாளும் வாழ் நாளும் யாரறி வார்”

என்றருளியுள்ளமையைக் கற்றறிக.