பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

215



போற்றி! அருளுக!

கடவுளை, தமிழில் ‘போற்றி! போற்றி!’ என்று வாழ்த்துதல் மரபு. போற்றி- என்ற சொல்லிற்கு, ‘போற்று’ என்றும் பொருள் கொள்ள இயலும். போற்றி என்ற சொல்லில் உள்ள இகர ஈற்றை வியங்கோள் எனக் கொண்டால் ‘போற்று’ என்றாகும். ‘போற்றுக’ என்ற சொல்லுக்குக் ‘காப்பாயாக’ என்பது பொருள். இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

“போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர்” என்ற தொடரில் “போற்றி” வினையெச்சம். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்குபவன். “வாழ் முதலே!” என்றும் அருள்வது காண்க! இந்த உலகத்தின்- உலகப் பொருள்களின் ஆதியே! நின் திருவடிகளை அருளுக! அதாவது திருவடி ஞானத்தை அருள்க! திருவடி இன்பத்தை அருள்க! எம்மைக் காத்தருள் செய்க! முத்தி நெறியறியாத மூர்க்கரொடு கூடாமலும் எறும்புகளால் அரிக்கப்படும் புழுக்களைப் போல், புலன்களால் அரித்து, அழிக்கப் பெறாமலும் “நான்” “எனது” என்ற செருக்கால் தலையால் நடக்காமலும் சிந்தையுள் சிவம் வைத்து வாழ்ந்திட அண்ணித்தருள் செய்க! எமக்கு வாழ்நிலையின் முடிவான பேறாகிய நின் செந்தளிர் போன்ற திருவடிகளைத் தந்தருள்க. செம்மை சேர்ப்பதால் செந்தளிர்கள்! ‘செம்மலர்’ என்று சிவஞான போதமும் கூறும்! சிவம் ஆதியாக நிற்றல்போல அந்தமாகவும் நிற்கிறது. உலகம் அனைத்தும் ஒடுங்கும் கடையூழிக் காலத்திலும் உள்ளவன் சிவன். அவனே உயிர்கள் களைப்பாறிப் புத்துயிர்ப்புப் பெறுவதற்குக் கடையூழியில் உலகத்தை ஒடுக்கிப் பின் புதுப்பித்தருளுகின்றான். ஆதலால், சிவனே அந்தம், ஆதி, முதலும் நடுவும் ஈறும் அவனே!