பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடங்குகிறது. அமைகிறது. இதனை மெய்கண்ட நூல் தம்மையுணர்ந்து தலைவனையுணர்ந்து என்றருளுமாற்றால் உணரலாம்.

அடுத்து, யானை நீண்ட கையையுடையது. தொலைவிலிருந்தும் உணவெடுக்கும். தும்பிக்கையாலும் உணவெடுக்கும் - வாயினாலும் வாங்கும். நிறையத் தின்னும். எனினும் பருத்த தன்னுடலையே பார்க்கமுடியாத குறையுண்டு. அதேபோல மனிதன் உண்டுடுத்து வாழ்ந்தாலும் தன்னைப்பற்றியே அறிந்து கொள்ள முடியாத “அறியாமை நிலை” எண்ணியிரங்கத் தக்கது.

யானை இவ்வளவு பருத்த உடலுடையதாக இருந்தும், மிக நீண்ட கையையுடையதாக இருந்தும் தன்னுடைய முதுகில் உட்கார்ந்து தன்னை இயக்கும் மாவுத்தனை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதுபோலவே, மனிதன் கூர்த்த அறிவுடையனாக இருந்தும், தன்னுள் இருந்து தன்னை இயக்கும் இறைவனை உணர முடியாத நிலையில் இருக்கின்றான்.

யானை மதம் பிடித்தபோது, பிற உயிர்களுக்குத் துன்பமும் தொல்லையும் விளைவித்து தன் போக்கில் திரிகிறது. அதுபோலவே, மனிதன் ஆணவம் பிடித்தாட்டும் பொழுது தன்னைச் சார்ந்தவர்கட்குத் துன்பங்களும் தொல்லைகளும் விளைவிக்கின்றான். தன்னிச்சையாகத் திரிகின்றான். தன்னுடைய தலைவனாகிய இறைவனையே மறுக்கின்றான்.

யானை சில பொழுது தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்ளும். அதுபோலவே மனிதனும் தன்னை வினைச் சேற்றில் அழுத்திக் கொள்ளுகிறான். யானை, தன்னைக் கட்டுதற்குரிய சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பதுபோல மனிதனும் வினைவழித் தொடர்புடைய பிறப்புக்களுக்குத் தன்னையே