பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத்தில் சமுதாய நோக்கு

257


ஒத்தன ஒத்தன சொல்விட ஊருர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாதுவே!

என்பது மணிமொழி. நம் மனங்கொண்டதே மாளிகை என்று பேசுவது கூடாது; வழக்கிடுதல் தகாது. மற்றவர் மனமறிந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே மாணிக்கவாசகர் காட்டிய வாழ்க்கை நெறி.

மாணிக்கவாசகர் கடவுளையே மண்ணில் நடமாட வைத்தவர். மாணிக்கவாசகருடைய தூய அன்பை, அவர்தம் அன்பில் நனைந்து தோன்றிய மணி வார்த்தைகளைக் கேட்டு மகிழ, பெருமான் மண்ணில் நடந்தான்; கொற்றாளாக மண் சுமந்தான்; புண்ணும் சுமந்தான். இந்த வரலாற்று நிகழ்வு நம் இதயத்தைத் தொடுகிறது. கடவுள் வாழ்த்துப் பொருளல்ல; வாழ்வும் பொருள் என்பது திருவாசகத் தத்துவம். ‘வாழ்முதல்’ என்பார் மாணிக்கவாசகர். பெருமான் இல்லங்கள் தோறும் எழுந்தருளுவான், ஆண்டவனாக அல்ல, சேவகனாக! என்னே விந்தை! ஆண்டவனையே சேவகனாக இல்லங்கள் தோறும் எழுந்தருளுச் செய்த மாணிக்கவாசகர் சமுதாயத் தொண்டு நெறியை நினைவூட்டுகிறார். இல்லங்கள் தோறும் சென்று துன்பம் துடைத்துச் சமுதாயத்தை வாழ்வித்தல் இறை நெறி என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார். இன்று நம் சமுதாயம் இல்லங்களை நோக்கி வரும் சமயத்தைப் பெறமுடியாமல் அலமருகின்றது. ஏன் கோயிலை நாடி வந்தாலும் இன்று அணைப்பாரைக் காணோம்! மாணிக்கவாசகர் நெறி இல்லங்கள் தோறும் சென்று துன்பம் துடைக்கும் தூய தொண்டு நெறியேயாகும். இந்நெறி நிற்பதே மாணிக்கவாசகர் வழிபாடு!