பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8


குழந்தையும் - பொற்கிண்ணமும்


செல்வம் கொழிக்கும் வீடு. பொற்கிண்ணங்கள் நிறைய புழக்கத்தில் உள்ள வீடு. ஐந்து வயது நிரம்பாத இளம் குழந்தையின் கையில் பொற்கிண்ணம் ஒன்று கிடைத்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்குப் பொற்கிண்ணத்தின் மதிப்புத் தெரியுமா? அல்லது அதைப் பயன்படுத்தும் முறைதான் தெரியுமா ஒன்றும் தெரியாது. அந்தத் தங்கக் கிண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டாலும் வியப்பதற்கில்லை, பொற்கிண்ணத்தைக் கேட்டாலும் கொடுத்துவிடும் பொன்னின் அருமை தெரியாத அறியாக் குழந்தை அது.

அதுபோலவே ஆன்மாக்களிலும் அறியாக் குழந்தைகள் உண்டு. உடலால் மூத்திருந்தாலும்-உயிரால் குழந்தைமையில் நிற்போரே மிகுதி. இக்குழந்தைகளின்மேல் கொண்ட கருணையின் காரணமாக இறைவனே எளியனாக வலியவந்து ஆண்டுகொண்டு அருளை வழங்கினாலும் பாராட்டுவதில்லை; திருவருளின் அருமையை உணர்வதில்லை.

முன்னின்று பொழியும் திருவருளை விட பொன் பெரிது-வாழ்வு பெரிதெனக் கருதி திருவருளை அனுபவிக்காமல் அல்லல் வழிப்பட்டுழல்வது உலகியற்கை.