பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையும் - பொற்கிண்ணமும்

273


எளிமையைப் பெருமையாகக் கருதிப் போற்றுவது சால்புடையோர் மரபு; எளிமையை ஏமாளித்தனமெனக் கருதி ஏமாற்ற முயல்வது புன்மையாளர் மரபு. முயன்று பெற்றால் அப்படிப் பெற்றது அற்ப அளவிளதாயினும் ஆரா மகிழ்ச்சியுறுவர். அமைதி பெறுவர். முயலாது வந்தது பெருமைக்குரிய அளவினதாயினும் மகிழ்ச்சி யுறுவதில்லை. காரணம் எளிமையின் தத்துவம் அறியாமையே. இக்கருத்தினை மாணிக்கவாசகர் தம்மீது ஏற்றிப் பாடுகின்றார். அழகான பாடல் - ஆழமான பாடல், உள்ளத்தை தொட்டு உணர்த்தும் திருப் பாடல்.

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்ற லால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்வெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பருள் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவதோ சொலாய் பொருத்தமாவதே.

நினைக்குந்தொறும் இன்பநலமளிக்கும் சுவைமிக்கப் பாடல், இறைவன் பேரருளாளர், அருட்செல்வியைப் பங்கிலேயுடையவன். தூயவெண்ணீறணிந்தவன். இறைவன், ஏன் வெண்ணீறணிகின்றான்?

வினை வழிப்பட்டுழலும் உயிர்கள் நீறணிவது இயற்கை ஆனால் வினையில் நீங்கிய முதல்வன் நீறணிவது ஏன்? குழந்தைகளுக்கு நோய் எனில் குழந்தைக்கு மருந்து கொடுப்பதில்லை. பத்தியமும் இடுவதில்லை. குழந்தையின் நோய்க்குத் தாயே மருந்து குடிக்க வேண்டும். பத்தியமும் பிடிக்க வேண்டும். ஆதலால் தம்மைத் தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணிகின்றான். அத்தகு கருணைப் பெருங்கடல் வலிய மணிவாசகரை ஆட்கொண்டது.