பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்திக்கும் திறமை சிலருக்கு உண்டு. உதாரணமாக கணக்குப் போட வேண்டியிருக்கிறது. அக்கணக்கைப் புலனாலேயே போட்டுச் சொல்லக்கூடியவர்கள் இருக்கலாம். அவர்கள் மனத்தின் மூலமே போட்டு விடை சொல்லி விடுவார்கள். அப்படிப் போட முடியாதவர்கள் ஏடும்—எழுத்துகோலும் எடுத்து கைகொண்டு எழுதிப் போட்டுப் பார்த்துச் சொல்வர். அதுவே இறைவனை நெஞ்சத்திலிருத்திச் சிந்திக்கலாம். இவ் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. பூசலார் நாயனார் போன்றோருக்கேயாம் இந்த அருளியல் நிலை, புலன்களால் மட்டும் இறைவனைச் சிந்திக்கலாம். அச் சிந்தனையில் நிலைத்து நிற்க முடியாதவர்களுக்கும் — அதோடு புலனால் சிந்திக்கும் திறமை இல்லாதவர்களுக்குப் புலன்களுக்குச் சிந்தனை ஊட்டவேண்டிப் பொறிகள் செய்யும் வழிபாட்டுச் சடங்குகள் தொடங்கலாயின. பொறிகளும் புலன்களும் ஒருங்கியைந்து செய்யும் வழிபாடு தூய்மையானதாக—அனுபவத்தோடுகூடியதாக ஆழமானதாக-காதல் தன்மைமிக்குடையதாக இருக்கும். அதனாலன்றோ சிவநெறியில் அகப்பூசையும் புறப்பூசையும் இன்றியமையாதனவாக வலியுறுத்தப் பெறுகின்றன. மாணிக்கவாசகர் தனது சிந்தனையையும் காட்சியையும் — வணக்கத்தையும் — வார்த்தையையும் இறைவன் தனக்காக்கிக்கொண்டு ஆட் கொண்டருளினமையை வியப்புடன் வாழ்த்திப் பாடுகின்றார்.

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குள்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தெனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக் கா டனைய மேனித்
தனிச் சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே