பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

357


இப்பிறப்பிலும் திருவருள் கிடைத்து உய்திபெறாது போனால் உயிரின் நிலை.....அந்தோ, பரிதாபம்!

‘பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்’ என்ற சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது. அடியாராதல் எளிதன்று. மனத்தின் இயல்பு பரப்பரப்படைதல். தருமைக் குரு முதல்வரின்,

“பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்
வரவரக்கண் டாராய் மனமே!”

என்ற அருளுரை அறிக! பொறிகளின் உணர்வுக்குச் செய்திகள் கிடைத்தவுடன் அவை உண்மையா? பொய்யா? நன்மையா? தீமையா? என்று ஆராய்ந்து அறியும் திறனில்லாதவர்கள் பரபரப்பர்; உலையிடைப் பெய்த நொய்யரிசியைப் போல ஆவர். வெகுளி, அவலம் முதலியன வயப்பட்டு அழிவர்; அழிவைச் செய்வர். பரபரப்பை விட்டு அமைதியான மனச்சூழ்நிலையில் எண்ணிச் செயற்படுவோர் இம்மை–மறுமைகளைப் பெறுவர். ஏன்? இறையருளும் கூட எளிதில் கிட்டும். அலைகளில்லா ஆழ் கடலில்தான் விலை மதிக்க முடியாத முத்துக்கள் தோன்றுகின்றன. அதுபோல அலையும் சலனங்கள் இல்லாத அமைதியான மோன மனத்தில்தான் இன்பம் கிடைக்கும்; திருவருள் கைக்கூடும். அத்தகைய, மனம் பெற்றோர் இறைவனைக் காண்பர்.

இப்பிறப்பு அருமையானது. மண்ணகம், உய்தியைத் தரும் புண்ணிய பூமி! பரபரப்பினை விடுவோம்! அமைதியினை அடைவோம்!ஆண்டவனைத் தொழுவோம்! இருட்பொழுது புலரும்! உதய ஒளி தோன்றும்! எம் பெருமான் நமது இதயங்களில் பள்ளியெழுந்தருள்வான்?

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரு மறியார்
இதுவலன் றிருவுரு இவனவ னெனவே
எங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளும்