பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வணங்குவோம்! எது எமைப் பணி கொளுமாறு என்று கேட்போம்! பணிகளைச் செய்வோம்!

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயுநின் னடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.

8

இறைவன் நம்முடைய பழங்குடிசைதோறும் எழுந்தருளி அருளும் திறனை ஊனுருக, உயிருருகப் பாடிப் பரவுகிற பாடல் இது!

“அடைதற்கரிய அமுதமே! முற்பட்ட முதலும் நடுவும் முடிவும் ஆனவனே! உன்னை மும்மூர்த்திகளும் அறிய வல்லாரல்லர். மும்மூர்த்திகளாலேயே நின்னை அறிந்து ஏத்த முடியாதெனில் வேறு யார் நின்னை அறிதல் கூடும்? பந்தனை விரலியும் நீயும் உடனாகி அடியார்களுடைய பழங்குடிசைதோறும் எழுந்தருளிய பெருமானே! மேலுக்கும் மேலானவனே! செந்தழல் போன்ற திருமேனி காட்டித் திருப்பெருந்துறையுறை திருக்கோயிலும் காட்டி, எங்கள்பால் வந்து ஆட்கொண்டவனே! பள்ளியெழுந்தருள்க!

முதல், அனைத்திற்கும் முந்தியது ஆதலால், ‘முந்திய முதல்’ என்றார். உயிர்களுக்கு-வினைப்போகத்திற்கு ஈடாக உரியகால எல்லை வரை போகத்தை ஊட்டிப் பாதுகாத்தலின் ‘நடு’ என்றார். ஊழிக்கால எல்லைக் கண் உயிர்களைத் தம்மிடத்து ஒடுக்கி ஓய்வளித்து அனைத்திற்கும் முடிவாயிருத்தலின் ‘இறுதியும் ஆனாய்’ என்றார்.