பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாணிக்க வாசகர் “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்பார். இறைவன் திருவுள்ளத்தில் எண்ணிய அளவிலேயே உலகைப் படைத்தருளுகின்றான்; காத்தருளுகின்றான். தீமையை அழித்து நன்மையைக் காத்தருளுகின்றான். இறைவன், இயல்புகள் அனைத்தும் நினைந்து சொற்களால் வாழ்த்துதல் இயலாத ஒன்று.

இறைவனது உயர்ந்த குணங்களை எண்ணித் தொழப் பயன்படும் சொற்கள் ஆற்றலுடையன அல்ல. அச்சொற்கள் இறைவனை அணைய இயலாதன. ஆயினும் நீ, தாயிற் சிறந்த தயா உடையவன். தாய் கடமையைக் கருதிக் குழந்தையைப் பிரிந்து சென்றிருக்கிறாள். குழந்தை அழுகிறது! குழந்தையின் அழுகுரல் தாய்க்குக் கேட்காது!

ஆயினும் குழந்தையின் பசியை அவளே தெரிந்து, அவள் தானே வந்து ஊட்டி வாழ்விப்பதைப் போல பல பிறவிகளிற் பிறந்து இளைத்து, நின் அருளினின்றும் விலகி நிற்கும் எனக்கு நின் கருணையைப் பாலித்து ஆட் கொள்ளுதல் கடனன்றோ! என்று பட்டினத்தார் பாடும் பாடல் நெஞ்சைத் தொடத் தக்கது.

”ஆவலித் தழுதலில் அகன்ற தம்மனை
கேவலம் சேய்மையிற் கேளா ளாயினும்
பிறித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவியது இயல்பினை
அறியாது எண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்டுபெற் றாங்கே
தாய்தலைப் படநின் தாள்இணை வணக்கம்”

என்பது பாடல். “பிறவி தோறும் ஆசையினால் கட்டப்பட்ட கட்டுகளை நீ யன்றோ அவிழ்த்துவிட வேண்டும்! நான் எவ்விதம் அவிழ்ப்பேன்? என்று இரந்து கேட்கிறார் பட்டினத்தார். நாமும் கேட்போம்!