பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19


பேசு, வாழி!


பட்டினத்தார் இறைவனை நினைந்து நினைந்து நெகிழ்ந்துருகிப் பாடும்படி கூறுகின்றார். நாய் ஊர் சுற்றும்; மலம் உண்ணும்! எச்சில் இலையைத் தேடும்; தின்னும்; புழுதியிற் புரளும். அதனால் மாணிக்கவாசகர் “ஊர் நாயிற் கடைப்பட்டு” என்று இழிநிலைக்கு எல்லை காட்டுவார்.

ஆயினும் நன்றி அறிதலாகிய நற்குணத்திற்கு நாய்க்கு ஈடு எதுவுமில்லை. நாய் வலிந்து தீமை செய்வதில்லை. ஆயினும் மனிதன் நாயைப் போல் நன்றி அறிதலில் வளரவில்லை. ஆனால் நன்றியைக் கொன்ற வரலாறு உண்டு.

இறைவன் தோன்றாத் துணைவன். உள்ளத்திலும் எழுந்தருளியுள்ளான். வேண்டுவன எல்லாம் தருகின்றான். வாழ்விக்கின்றான். என்ன செய்தென்ன? அவன் இறைவனை நினைக்கின்றானா! இல்லை மறுக்கின்றான். அவன் கருணையை உணர்ந்தானா?

இறைவனை அறிவால் தேட முடியாது. பொருளால் தேட முடியாது. ஆயினும் தாயிற் சிறந்த தயாவாக அவன் இறங்கி அருளுகின்றான். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்பது திருவாசகம்.