பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேசு, வாழி!

373


அழாமையால் “நாய் அனைய” என்று நாயை இழித்துக் கூறுகின்றதைப் போல, நாயை உயர்த்துகின்றார்.

நாய்க்கு நன்றி உண்டு. தம் தலைவனைக் காணின் அன்பு காட்டும். ஆனால் மனிதனுக்கு அது இல்லையே! என்ற ஏக்கத்தில் “நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன் களித்துத் தாயணையனாய் அருளும் தம்பிரான்” என்று பாடுகின்றார் பட்டினத்தார். பேரருளின் அருமைப் பாட்டை உணராதது ஏன்? ஆசைகளால் மனித மனம் அலைப்புறுகின்றது. ஆதலால், அருளில் நாட்டமில்லை.

தூண்டில் வாயிற் புழுவை விரும்பி மீன் இறக்க வில்லையா? அது போல நாம் துன்பத்தில் அழிகின்றனம். விளக்கொளியை விரும்பி விட்டில் விழுந்து இறக்கும் அறியாமையை யார்தான் மறுக்க இயலும்.

நாமும் காட்சியில் மயங்கி அழிகின்றோம். வண்டினங்கள் மனம் நாடுவன. அதனால் செண்பக மலர்களில் வண்டுகள் விழுந்து புரளும். சண்பக மலர் மணம் நாடி தாங்களும் அழியும்.

நெறி கடந்த இன்ப நுகர்வுகளில் உயிர்கள் அழிகின்றன. இவை ஐயறிவின. அவை மயங்கி அழிதல் இயற்கை. அவை சூழ்நிலையை மாற்றும் திறனுடையன அல்ல. ஆறறிவினனாகிய மானுடம் இங்ஙனம் அழியலாமா? மனிதன் சிந்தையில் தெளிவு பெற்று, தெளிவினுள் சிவத்தைக் கண்டு வாழ்ந்திடுக.

ஆசை கொடிது “ஆசை அறுமின்கள்” “ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்பது திருமந்திரம். ஆசை மனத்திற்கு மயக்கத்தைத் தரும்; அறிவைக் கெடுக்கும்” அவலத்தைத் தரும்; ஈசனோடாயினும் ஆசை அறுமின். இன்று, கண்ணப்பர் பிறந்த நாட்டில் கடவுள் வழிபாடு வணிகமாகி விட்டது. ஆசைப்பட்ட மனம் மாசுறும்.