பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லை கடந்த பொருள்!

383



இதுவே, பேசா அனுபூதி! பேச்சு இறந்ததே அனுபூதி! விவகார உணர்வு ஒடுங்கும் வரையில் அனுபூதி தோன்றாது. இதனைப் பட்டினத்தார், நன்கு விளக்குகிறார்.

ஆதலால், இறை நெறியில் பட்டினத்தார் நெறி, தேடும் நெறியல்ல; ஓதும் நெறியல்ல; உற்றுணர்ந்து அறியும் நெறியேயாம். ஞானம் ஆரவாரத்தில் வராது. ஆழ்கடலின் அடி மடியில்தான் நன்முத்து கிடைக்கும்.

அதுபோல வாழ்க்கையின் ஆழ்கடலில்தான் “ஞானம்” என்ற முத்து கிடைக்கும். ஆதலால் பட்டினத்தார் நெறியில் இறைவனைக் காண மோனத்தில் அமருவோம்.

மோனம் என்பதற்கு பரபரக்காமல் ஒன்றினை நினைந்து நினைந்து அதில் ஆழ்தல் என்பதே பொருள். எந்தச் சூழ்நிலையிலும் மனம் விகாரமடையாமல் அமைதியாக இருத்தலே மோனம். இத்தகைய மோனநிலை ஆற்றல் மிக்கது. அத்தகு மோனத்தைப் பெற பட்டினத்தார் அடிச்சுவட்டில் முயலுவோமாக! வாழ்ந்து வாழ்விப்போமாக.