பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னுடைய நிறைவின்மையைப் பிறர் குறையைக் காட்டுவதன் மூலம் மறைக்க முயற்சிக்கின்றனர்.

இன்றையச் சமுதாய வாழ்க்கை கலைந்த வீடு போல் காட்சி அளிக்கிறது. கலைந்த வீட்டில், எப்படிக் குடியிருப்ப தென்பது முடியாதோ அதுபோலவே, அன்பிலும் உறவிலும் வாழவேண்டிய சமுதாயம் தம்முள் கலைந்து விடுமாயின் மனித சமுதாயம் வாழ முடியாது.

நன்றா தீதா என்று காண்பது மட்டும் போதாது. நன்றும் தீதும் நிகழ்வதற்குரிய காரணங்கள் என்ன என்று ஆராய்தலே வாழ்க்கையின் உயர்ந்த முறை.

ஒரு நிகழ்ச்சி தீமையாக இருக்குமானால் அத்தீமையினுடைய தோற்றங்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டு நலன் விளைவதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். தீமையை வெறுப்பது மட்டும் சீர்திருத்த மல்ல-தீமையினிடத்தில் அதற்கு மாறான ஒரு நன்மையை வைத்துத் தீமையை அகற்றுவதே சீர்திருத்தம். சிற்சில பொழுதில் சூழ்நிலையின் காரணமாகவும் தம்முடைய வழக்கத்தின் வழிப்பட்ட பலவீனத்தின் காரணமாகவும் செயல் மாட்டாமையின் காரணமாகவும் நம்முடன் பழகிய அரிய நண்பர்களே தீமை செய்து விடுவதும் உண்டு. இத்தீமையின் வழி, நாம் ஆத்திரப்படுதல் முறையல்ல. முன்னும் பின்னும் உள்ள வாழ்க்கைப் போக்குகளை அன்பின் தரமான நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனாலன்றோ திருக்குறள்,

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்”

என்று கூறுகிறது. இக் கருத்தினையே ‘கண்ணால் கண்டதும் பொய்-காதால் கேட்டதும் பொய்-தீர விசாரித்தறிவதே மெய்’ என்று பழம் பாடல் கூறுகிறது. ஆகையால் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல நண்பர்களைப் பெற்று இனிமையாக வாழ வேண்டுமென்றால் ஆராய்கின்ற மனப்பண்பு தேவை.