பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காக்கை விரும்பும் கனி!

407



உடலிற் புறப்பட்ட கட்டி குற்றமுடையதே! துன்பம் தருவதே! ஆனாலும், அதையும் மெல்லத் தடவிக் கொடுத்து அது பழுத்தற்குரிய உணர்வினை வழங்கிப் பழுத்த பிறகு வலியில்லாமலும், செங்குருதி சிந்தாமலும் அறுத்து அகற்றும் முறைதானே மருத்துவமுறை! ஈரும் பேனும் உள்ள தலையானாலும் எண்ணெய் தடவிச் சீவித்தானே அகற்ற வேண்டும்! ஆகக் குற்றங்களைத் திருத்தும்முறை இனிய முறையாக இருக்க வேண்டும்; அன்பு கலந்த முறையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உயிர்கள் மகிழ்ந்து குற்றங்களினின்றும் எளிதில் விடுதலைபெறும். இதுவே இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையும் கூட!

உயிர்கள் ஆணவத் தொடர்பால் அறியாமை வழிப்பட்டு வேட்கை கொள்கின்றன. இறைவன் “இது தீது!” “அது தீது” என்று எடுத்த எடுப்பில் உபதேசம் செய்வதில்லை. உயிர்களின் வேட்கையை அறிந்துகொண்டு பொன்னும், மெய்ப் பொருளும் தந்து, போகமும், திருவும் வழங்கி, உயிர்கள் செல்லுழித் தான் சென்று, புற்ம் புறம் திரிந்து, துய்ப்பில் வேட்கை தணிந்துழி அறிவினைத் தந்தருளி ஆண்டருளுகின்றான். சுந்தரர் வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டு!

இத்தகைய குற்றங்களை அன்பின் வழியில் அகற்ற முயல்வோர் சான்றோர். இத்தகு சான்றோர் இன்று நாட்டில் அருகிவிட்டனர். ஏன்? பிறர் குற்றத்தைக் தூற்றுவதே தொழிலென வளர்ந்து வருகிறது. துரதிருஷ்டவசமாகச் சீர்திருத்தம் என்று அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். இது நெறியுமன்று; முறையுமன்று. ஒருவர் குற்றத்தை நீக்குபவர்களுக்குத் தாயிற் சிறந்த தயாவும், மருத்துவரிற் சிறந்த அறிவும் தேவை.

ஆனால், இன்று நாட்டிடையில் குற்றமே கானும் இயல்பு பெருகி வளர்கிறது. உண்டோ? இல்லையோ? எங்கும்