அருள்தரு தெய்வசிகாமணி தேசிகேந்திரன் புகழ் பாடும் நான்மணிமாலை தத்துவச் செறிவுடையது. சிவஞானம் பொதுளும் பெருமையுடையது.
அருள்:- அன்பீனுங் குழவி, அருள்! அன்பு வளர்ந்த நிலையில் அருளாகிறது! அன்பு தற்சார்புடையது. உறவுமுறை பற்றியது. உதவிகள் நாடுந்தன்மையது; நன்றி நாடுவது! அருள், பிறர் நலச் சார்புடையது; உறவு முறைகளைக் கடந்தது. திருவள்ளுவர் எடுத்துக் காட்டும் மருந்து மரம் அருளுக்கு ஒரு விளக்கம். அறம் செய்ய வேண்டுமாயின் அருளுணர்வு வேண்டும். பயன் நோக்கிய பணி அறமன்று. தற்சார்புடைய பணி அறமன்று. பயன் கருதிய பணி அறனிலை வாணிகமேயாம்! பிறர் நலம் கருதிய பணிகளே அறம்; அர்ப்பணிப்புணர்வுடன் செய்வதே அறம்!
சிவபெருமானின் ஊர்தி எருது. இந்த எருதினை ‘அறம்’ என்று கூறுவது மரபு. சிவபெருமான் ஓங்கி உயர்த்தும் கொடியும் எருதுக் கொடியேயாம்! உலகியலில் பசுவே சிறந்தது; வணங்கத்தக்கது என்பர். ஆனால் சிவநெறியில் எருதே உயர்ந்தது; வழிபாட்டுக்குரியது. ஏன்? எருது கடுமையான உழைப்புப் பிராணி! வைக்கோலைத் தின்று