பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

47



ஆம்! மானுடப் பிறவி, வென்று விளங்கவேண்டிய பிறவி! புவியை நடத்தவேண்டிய பிறவி! ஆனால், நடப்பது என்ன? மனிதன் வண்டியில் சவாரி செய்யவில்லை! வண்டி மனிதன் மீது சவாரி செய்கிறது!

அறிவுப் புலன்கள் நிரம்பிய உடல்! ஆற்றல் மிகுதியும் உடைய உடல்! அன்பினைப் பொழியும் இதயம்! கிளர்ந்து கிளர்ந்து வளரும் உயிர்! இத்தனையும் என்னாயின? பாழாய்ப் போயின.

ஓர் உவமை

மாணிக்கவாசகர் ஞான வாழ்வின் அருமையை அறியாதவர்களின் அவலத்தைப் பல்வேறு உவமைகளின் மூலம் தன்னைச் சான்றாக வைத்துக் கூறுவார் போல விளக்குகின்றார்.

யானை, உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. அதன் கை மிகப் பெரியது. ஆயினும் ஏன்? அந்த யானைக்குத் தன் உடலைப் பார்த்துக்கொள்ள முடியாது. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்! அதுமட்டுமா? அந்தோ, பரிதாபம்! யானை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் கொடுக்கும். இது யானையின் இயல்பு.

மனிதன் யானை போலப் பெரிய உடலுடைய வனல்லன்; ஆயினும் வலிமை மிகுதியும் உடைய கருவிகளை உடையவன். எனினும் அவன் தன்னை அறிகிலன்; தன்னுடைய தலைவனை அறிகிலன். மனிதன் தனக்குத் தானே துன்பமிழைத்துக் கொள்கிறான். வினைப்பந்தங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறான்.

“இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான் கண்டி லேன் கண்ட தெய்வமே