பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

53



நால்வர் பெருமக்கள் காலத்திலும் பல திருவுருவங்கள் பல பெயர்களில் வழங்கின என்பது உண்மை. இந்தத் திருமேனிகளைத் தாம் அருளிய பாடல்களில் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். ஆயினும் ஆன்ம நாயகனாக ஏற்று வழிபட்டது சிவபெருமானையே! அம்மையப்பனையே!

தமிழர் தம் வழிபடுந் திருமேனி அம்மையப்பனாகவே பழங்காலத்தொட்டு இருந்து வந்திருக்கிறது. அருளிப் பாடுகள் நிகழ்ந்தபோதெல்லாம் அம்மையப்பன் திருக்கோலத்திலேயே நிகழ்ந்துள்ளன.

இன்றும் பழைய திருக்கோயில்களில் எல்லாம் குறிப்பாக அருளிப்பாடுகள் நிகழ்ந்த தலங்களில் எல்லாம் கருவறையில் அம்மையப்பன் திருக்கோலம் எழுந்தருளியிருப்பதைக் காணலாம். சங்க கால இலக்கியங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் பெரும்பாலும் அம்மை அப்பன் திருக்கோலமே பேசப்பட்டுள்ளது. ஐங்குறு நூறு,

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே!”

என்று வாழ்த்தும் திருக்களிற்றுப்படியார்.

அம்மை அப்பரே உலகுக்(கு) அம்மை அப்பர் என்று அறிக
அம்மை அப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்-அம்மை அப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்,

என்று கூறும் திருமுறைகள் முழுதும் அம்மையப்பன் வழிபாடே பேசப்பெற்றுள்ளது. மாணிக்கவாசகர் தில்லையம் பதியில் அருளிச் செய்த திருக்கோத்தும்பியில்,

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்