பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

63



இங்ஙனம் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் “இரு” என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப் பிரிவு மாணிக்கவாசகரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. தினையின் பாகமும் பிரிவது கூடாது என்பது மாணிக்கவாசகரின் விருப்பம். பிரிவுத்துன்பம் தாளாமல் மாணிக்கவாசகர் அழுது அழுது பாடிய பாடல்கள் திருவாசகம். திருவாசகப் பாடல்களுக்கு உருக்கம் அமைந்ததற்கு இதுவே முதற்காரணம்.

அடுத்து, மாணிக்கவாசகர் இறைவனை முன்னிலைப் படுத்தியே பாடுவார். மாணிக்கவாசகர் தனது ஏழ்மையை-எளிமையை நினைந்து நினைந்து இறைவனிடத்தில் உருகி வேண்டுதல் காரணமாகவும் உருக்க நிலை அமைந்துள்ளது.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அறிவால் சிவனேயாவார் என்று போற்றப்படுபவர். திருவாசகம் முழுதும் ஞானம். திருவாசக பூசை, சிவபூசைக்கு நிகரானது என்று ஒரு வழக்குண்டு.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் “நான்” என்பதைக் கெட்டுப் போகச் செய்தவர். “கூடும் அன்பினில் கும்பிடல்” என்பது போல இறைவன் திருவடியைப் போற்றி வணங்குவதைத் தவிர வேறு எதுவும் வேண்டாதவர்.

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார்நமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப்
புறம் போகவொட் டேனே!

(உயிருண்ணிப்பத்து–7)

என்று பாடியுள்ளார்.