பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மனிதன் விரும்புவது புகழ்! ஆசைப்படுவது புகழ். ஆனால் புகழ் விருப்பம் கூட மனிதனைக் கெடுத்து வீழ்த்திவிடும் என்பதே அறநெறி முடிவு. அதனால் “வேண்டேன் புகழ்” என்றார். மேலும் “நின்னடியான் என்று ஏசப்பட்டேன்” என்றும் “சகம் பேய் என்று சிரித்திட” என்றும் “நாடவர் பழித்துரை பூணதுவாகக்கொண்டும்” திருவாசகத்தில் என்றும் அருளியுள்ள பிற பகுதிகள் நினைவிற்குரியன. புகழுக்கு அடுத்து மனிதனை ஆட்டிப் படைத்துத் துன்புறுத்துவது செல்வம். ஆதலால் “வேண்டேன் செல்வம்” என்று அருளிச் செய்துள்ளார். மண்ணக இன்பமும் சரி, விண்ணக இன்பமும் சரி வேண்டாம். இது மாணிக்கவாசகரின் தூய பற்றற்ற வாழ்க்கைக்கு அளவுகோல். திருப்பெருந்துறை இறைவனுடைய திருவடித்தாமரைகளை சென்னிக்கு அணியாகச் சூட்டிக்கொண்டார். இனி திருப்பெருந்துறை இறைவனுக்கு ஆட்பட்டிருப்பதே கடன்! “புறம் போகனே இனிப்புறம் போகல் ஒட்டேனே!” என்ற உறுதிப்பாடுடைய வரி பலகாலும் படிக்கத்தக்க வரி!

துறவின் முதிர்ச்சியும் அன்பு நிறைந்த ஆர்வமும் பண்சுமந்த தமிழும் ஒன்று சேர்ந்து உருக்கத்தைத் தந்தன. இதனை “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற பழமொழி உணர்த்துகிறது. திருவாசகத்திற்குரிய பிறிதொரு சிறப்பு எண்ணற்ற உவமைகள், உருவகங்கள் உடையதும் ஆகும். கருத்துக்களை விளக்குவதில் உவமைக்கு ஈடு ஏது? மாணிக்கவாசகர் தம் அனுபவத்தை எண்ணி தம் உடல் முழுதும் கண்களாக அமைந்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்