பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

65


சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே!

என்று பாடுவார். யார் சதுரர்? தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும்; பாட முடியும்; எழுத முடியும் என்று செய்து காட்டிய சதுரர்! சிவபெருமானிடம் அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரர் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானு கோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண் சுமக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதில் ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரர்!

நாமும் நாளும் திருவாசகம் ஓதி, சதுரப் பாட்டுடன் வாழ முயல்வோம்!

எடுத்தாளும் இறைவன்!

மாணிக்கவாசகர் தமது வாழ்நிலையை எப்போதும் தாழ்த்திப் பேசுவார்! “தாழ்வெனும் தன்மை” - மாணிக்கவாசகருடைய அணி, மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போதும் பழுத்த மனத்தடியாராக புளியம்பழம் போலவே இருந்தார் என்பதை அவருடைய வரலாறு உணர்த்துகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தன்முனைப்பே இல்லை. “நான்”, “எனது” என்ற செருக்கிலிருந்து முற்றாக விடுதலை பெற்றவர் மாணிக்கவாசகர்.

அரசன் குதிரைகள் வாங்கத் தந்தனுப்பிய செல்வம் கொண்டு மாணிக்கவாசகர் குதிரை வாங்கவில்லை. ஏன்? குதிரை வாங்கினால் படைக்கும் பயன்படும். படை போருக்காகும். போரினால் ஏற்படுவது மரணங்கள்; இழப்புக்கள்!