பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

73


வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!
முனைவனே முறையோ நான் ஆன வாறு
முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!

(திருச்சதகம்–22)
உயிரின் தவிப்பு

யானை பெரிய விலங்கு. ஆம்! உடலால் பெரிய விலங்கு! அதனால் பெரிய கையால் உண்கிறது! தும்பிக்கை நீண்ட பெரிய கை! ஒரே நேரத்தில் தும்பிக்கையாலும் வாயிலும் உணவு வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு ஊன் பெருக்கும் யானை! அந்தோ பரிதாபம்! தன்னை, தன் உடலை அறிந்து கொள்ள இயலாதது யானை! சமய நெறியில் கடவுளைத் தெரிந்து கொள்ளுதல், கடவுளை வழிபடுதல் இரண்டாம் நிலையே! முதலில், மனிதன் தன்னை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் மாணிக்கவாசகர் ஆன்ம ஆய்வில் “நான் ஆர்’ என்று முதலில் தன்னைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகின்றார். “தன்னை யறிதல்” முதல் கடமை! தன்னுடைய குறைகள் அறிந்தால் தானே நிறைகளை நாடிப் பயணம் செய்ய இயலும்? “தம்மையறிந்து தலைவனை உணர்தல்” என்பது மெய்கண்டார் வாக்கு!

மனிதன் யார்? மனிதன் தானா! மிருகத்தில் மனிதன்; மனிதனில் மிருகம்; மனிதனில் மனிதன் என்ற படிமுறைகள் உண்டு! இந்த வரிசையில் மனிதன் யார்? தான் யார் என்று அறியாத நிலையில் வளர்ச்சியில்லை! ஆதலால், தன்னை

கு.இ.VIII.6.