பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

81


பணியாள் நாய்க்குத் தீனி கொடுத்து அதை வயப்படுத்திக் கொண்டு கொலை, கொள்ளைகள் செய்துவிடுகின்றானே! அப்போது இந்த நாய் காவல் தொழிலை இழந்து விடுகிறது; குரைப்பதும்கூட இல்லை. இந்தக் குற்றங் குறைகள் வளர்ப்பு நாய்க்கேயாம்! ஆனால், திருவாசகத்தில் நாய் நன்றியில் உயர்ந்தது என்றே பேசப்பெறுகிறது. ‘நாய்’ முப்பது இடங்களுக்கு மேலாகப் பேசப்படுகிறது. இதில் பொதுவாக நாயின் சிறப்புக் கூறப்படுகிறது. மனிதன் நாயினும் கீழானவனாக இருக்கிறான். ஆம்! நாய்! உணவளித்து உண்டு கொண்டு இருக்கும்பொழுது உணவளிப்பவனுக்கு எந்தத் தீங்கும் நினைப்பதில்லை; செய்வதில்லை! உணவளிப்பவன் உணவளிக்காமல் வேறு ஒருவர் உணவளித்தால் அவனுக்கும் நன்றிப் பெருக்குடையதாக இருக்கிறது. அவ்வளவுதான்! ஆனால், மனிதனோ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிறான்; உண்டு கொண்டு இருக்கும் போதேகூட தீமை நினைக்கிறான்! நாய், தான் பெற்ற பேற்றை எண்ணிப் பார்ப்பதில்லை. நாய்,-வளர்ப்பு நாய் வளர்ப்பவனின் அருமை உணர்வதில்லை. “நாய் பெற்ற தெங்கம்பழ”த்திற்கு “ஏது பயன்?” அதுபோல் மனிதரில் பலர் இறைவனின் அருமையை உணர்வதில்லை. இறைவனின் அருட்கொடையால் எத்தனை எத்தனை கோடி இன்பங்கள் இந்த உலகில் உள்ளன? இவற்றை உணர்வார் யார்? இவற்றினைத் தந்தருளிய கடவுளை நினைப்பார் யார்?

நாயில் ஊர் நாய் ஒருவகை! அதாவது வளர்ப்பார் இல்லாத நாய்! அது சுதந்திரமாய்த் திரியும். காலையில் அம்மம்ம, எவ்வளவு சுறுசுறுப்பு! எழுந்து ஊர் சுற்றும்! தன்னை ஒத்த ஊர் நாய்கள் நிற்கும் இடங்களில் நிற்கும்! விளையாடும்! சண்டைபோடும்! குடும்பம் நடத்தும்! எச்சில் இலைகளைத் தேடி ஓடும்! ஆங்கும் ஒரு யுத்தம்! படுகளம்! கிடைக்கும் எலும்பைக் கடிக்கும். செங்குருதி சொட்டச் சொட்ட ஒதுங்கிப் போய் இருக்கும்! மீண்டும் எழுந்து