பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

83


தெரிந்தும் தெரியாமலும் அயர்ந்தும் சோர்ந்தும் செய்யும் மனிதரின் பிழைகளைப் பொறுத்தாற்றாது தேவசிகாமணி குருதேவர் சுடுவது அவரையல்ல; தவறு செய்பவர்களின் பாசத்தினையே குற்றங்களையே என்று கூறுவர். ஆதலால் வளர்ப்பு நாய் வளர்ந்து வாழ்ந்து பேறடைய முயல்வதே சிறப்பு! ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேரக்கூடாது.

வளர்ப்பின் இலக்கணம் என்ன? அடையாளம் என்ன? வளர்ப்பில் கல்வி இருக்கும்! கலைஞானம் இருக்கும்! கல்வியும் கலைஞானமும் வாழ்க்கையை வளர்ப்பனவாம்! வாழ் நிலையில் உயிர் நிலையாகிய அன்பு, கலைஞானத்தின் பயனேயாம். அதனால்தான் சிவகோசரியாருக்குக் கிட்டாத “கலைமலிந்த சீர் நம்பி” என்ற சிறப்பு, கண்ணப்பருக்குக் கிடைத்தது. மனம் இயல்பாக நல்லதும் அல்ல கெட்டதுவும் அல்ல. நல்லது செய்வதும் அல்ல. ஓயாது ஒழியாது சலித்துக்கொண்டே இருக்கும். அதாவது இயக்க நிலையில் இருக்கும். இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு எவ்வழியில் இயக்கினாலும்-அவ்வழியில் ஆன்மா இயங்கும். ஆன்மாவின் இயல்பு சார்ந்த தன் வண்ணம் ஆதல். ஆன்மாவைச் சார்பு இயக்கினால் ஊர் நாயைப் போல் இயங்கும். திருவருட் சார்பு இயக்கினால் வளர்ப்பு நாய்போல் இயங்கும். உண்மையில் ஆன்மாவை இயக்குவது சார்புநிலை; சுற்றுப்புறச் சூழ்நிலை. அதனால்தானே “மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்றார் ஒளவை மூதாட்டி. மனத்தைப் பக்குவப்படுத்துவது கல்வியும் கலை ஞானமுமாம்! ஈசன் கூட கல்லார் நெஞ்சில் நில்லான்! கல்லா மனத்தராக இருப்பவர்களே, ஊர் நாய்போல வாழ்வார்கள்.

கல்வியும் கலைஞானமும் இல்லாதாருக்கு உடம்பின் அருமை தெரியாது. அதனால் உடம்பினைப் பேணவும்