பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

195



"வியாபாரிகள் பெருகும் நாடு அழியும்” என்றார் கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரட்டீஸ், உற்பத்திக்குப் பயன்பட வேண்டிய மனித ஆற்றல் உட்கார்ந்து அழிகிறது. இந்த வியாபாரத்தில் கலப்படம், அளவுக்குறைவு போன்ற மோசடிகளும் மலிந்து வருகின்றன. இத்தகைய வியாபாரிகளே இன்றைய அரசியல் இயக்கங்களுக்கும், சமய இயக்கங்களுக்கும் கூடப் பின்னணியாக உள்ளனர். இது வரவேற்கத் தக்கதன்று. சேக்கிழார் வாணிகத்தின் சிறப்பை வாயாரப் புகழ்கிறார். வாணிகம் அறவழியில் நிகழ வேண்டும்-வாய்மையில் வழாதிருக்க வேண்டும் என்பது சேக்கிழாரின் வாக்கு காரைக்கால் அம்மையார் வரலாற்றில் காலைக்காலை அறிமுகம் செய்து வைக்கும் சேக்கிழார்,

"மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஒங்குபதி
கூனல்வளை திரைசுமந்து கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால்”

என்று பாராட்டுகின்றார். அத்தகைய வணிகர் சமுதாயம் நம் நாட்டுக்குத் தேவை.

அரசியல் நீதி

சேக்கிழார் முதலமைச்சராக இருந்தவர். ஆதலால் அரசியலைப் பற்றி ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகப் பேசுகிறார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் திருநகரச் சிறப்பு மிகுந்த சிறப்புடையது. அதில் அரசு, மன்னுயிரை எப்படிக் காக்க வேண்டுமென்பதை விளக்கிப் பாடுகிறார்.

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தான்தனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆணபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?