பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடல்களைக் கேட்பதில், தமிழை வளர்ப்பதில் சிவபெருமானுக்கு அளவிறந்த ஆர்வம் உண்டு.

மனிதகுல வரலாற்றியல் படி ஓர் இனத்திற்கு, சிந்தனையைத் தூண்டி வளர்ப்பது தாய் மொழியே! அறிவை வளர்ப்பதும் தாய் மொழியேயாம்; சமய ஞானத்தை வளர்ப்பதும் தாய் மொழியேயாம். உலகத்தில் எந்த ஒரு இனத்திற்குமுரிய சமயமும் அயல் மொழியில் தோன்றியதில்லை. அவ்வாறு தோன்றியதாக வரலாறு இல்லை. சமயங்கள் சில மத மாற்றங்கள் மூலம் அயலினத்தில் பரவியிருக்கலாம். நமது மொழி தமிழ், நமது சமயம் சிவநெறி; நமது சமயம் சம்ஸ்கிருதத்தையும் அம்மொழி வழிப்பட்ட வாழ்க்கை முறைகளையும் திணிக்கும் இந்து சமயமாக இருத்தல் இயலாது. நமது சமயத் தத்துவ ஞானம் காலங் கடந்த பழமையுடையது. பிள்ளைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாக விளங்குவது. தமிழே நாகரிகம்; நாகரிகமே தமிழ், தமிழே சைவம், சைவமே தமிழ்! அதனாலன்றோ சேக்கிழார் "செழுந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறை வெல்ல" என்றருளிச் செய்தார். இன்றோ நமது சமயத்தில் தமிழ், இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பெற்று சமஸ்கிருதம் முதல் நிலையை அடைந்திருக்கிறது. இது வாய்மைக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத நிலை. தமிழ்மொழி வழிபாடு தமிழருக்குப் பிறப்புரிமையாகும். திருக்கோயில்களில் தமிழும் தமிழ் மரபுகளும் ஆட்சி செய்ய வேண்டும்.

திருஞானசம்பந்தருடைய பண்ணிசைப் பாடலுக்கு இரங்கி உலகோர் காணப் பொற்றாளம் தந்தருளியவன் இறைவன். திருஞான சம்பந்தருக்கு இறைவன் அருளிச் செய்ததை நினைத்த பொழுது தனக்கு, திருக்கோளில் நெல்மூட்டை எடுத்துக் கொண்டு வந்த பெருங்கருணைத் திறனும் நினைவிற்கு வருகிறது. அந்நிகழ்ச்சியை நினைந்து பாடுகின்றார்.