பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள் 47




அதுமட்டுமின்றிப் பெரியபுராணம், தொழில்காரண , அடியார்க்குரிய தகுதியை மரியாதையைத் தரமறுப்பதை மறுக்கிறது. இன்று, எங்கும் சமூகத் தகுதிப்பாடு (Social Status) பற்றிப் பேசப் பெறுகிறது. ஆனால், அதனை வழங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. சேக்கிழாரின் கலிக் கம்பநாயனார் இந்தச் சமூகத் தகுதிப்பாட்டினை உணர்ந் தவர்; வழங்கியவர். அங்ங்னம், வழங்கத் தடையாக இருந்த தம் மனைவியின் கையைத் தாமே தடிந்து தண்டித்தவர். கலிக்கம்பர் வீட்டில் முன்னர்ப் பணியாளாக இருந்த ஒருவர், பணியிலிருந்து விலகியபிறகு, சிவனடியாராக வாழ்க்கையைத் தொடங்கிக் கலிக்கம்பர் வீட்டுக்கு வருகிறார். கலிக்கம்பர், அடியார்களை அமுது செய்ய அழைத்துச் செல்வதற்குமுன், தம் மனைவி தண்ணிர் வார்க்கத் தாமே அடியார் திருப்பாதங்களைக் கழுவித் தூய்மைசெய்து அழைத்துச் செல்லுதல் வழக்கம். அங்ஙனம் ஒருநாள் அடியார்களின் திருப்பாதம் விளக்கிக் கொண்டிருந்தபோது முன்சொன்ன சிவனடியார் வந்துவிட்டார். கலிக்கம்பரின் மனைவிக்கு உயர்வுணர்ச்சி ஏற்பட்டுத் தங்கைகளால் தண்ணிர் வார்ப்பது தடைப்பட்டது. கலிக்கம்பர், மனைவியின் கரத்தைத் தடிந்து தாமே திருப்பாதங்களில் தண்ணிர் வார்த்துக் கழுவுகின்றார். ஆதலால், அவரவர் ஒழுக்கத்திற்கியைந்த சமூகத் தகுதிப்பாட்டைத் தொழில் முதலிய வேறுபாடுகள் காணாமல் வழங்க வேண்டும் என்பது சேக்கிழாரின் திருவுள்ளம். -

காடவர்கோமான் கட்டிய கற்றளிக் கோயிலிலும் திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் எடுத்த மனக்கோயில் அற்புதமானது-அண்டர் நாயகன் தங்குதற்குரியது என்று எடுத்துப் பாடுவதன் மூலம் சேக்கிழார் பதவி செல்வம் முதலியவற்றாலுள்ள வேற்றுமைகளை விலக்கிப் போற்றற்குரியது உளம் நிறை அருளொழுக்கமே என்று உறுதியாகக் கூறுகிறார்.