3. பிரியா விடை
குமணன் பெருஞ்சித்திரனாரிடம் மிக்க அன்பு பூண்டு பழகினான். அவருடைய புலமையும் பண்பும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிரமலைக் குரங்கைப்பற்றிப் பாடியதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு உவகை உண்டாகும்; உடனே நகையும் எழும். “நீங்கள் குரங்கை எப்படிக் கவனித்தீர்கள்?” என்று கேட்டான்.
“மலையையும் மரத்தையும் விலங்கினங்களையும் கண் கண்டு இன்புறுவது எங்களுக்கு இயல்பு அல்லவா? மனிதர்கள் யாவரும் ஒரு மாதிரியே இருப்பதில்லை. அடிக்கடி மாறுகிறார்கள். ஆனால் மலை மாறுவதில்லை. மரம் கனி தருவதையும் நிழல் தருவதையும் நிறுத்துவதில்லை. விலங்குகள் அன்பு செய்வதில் மாறுபடுவதில்லை. அதனுல் அவற்றைக் கண்டு கண்டு அவற்றைப் படைத்த இறைவன் பெருமையை உணர வழியிருக்கிறது. அந்தக் குரங்குக்குத் தன் மனைவியிடம் எத்தனை அன்பு!”
“ஆம், மனிதனிடம் காணாத பல நல்ல இயல்புகளை விலங்குகளிடம் காண்கிறோம். உங்களைக் கண்டு பழகும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும் பேறாக நான் கருதுகிறேன். உங்களுக்கு மனைவி மக்கள் இருக்கிறார்களா?” என்று குமணன் மெல்ல விசாரிக்கத் தொடங்கினான்.
புலவர் அங்கே வந்து சில நாட்கள் ஆயின. குமணனும் அவரும் ஓரளவு நெருங்கிப் பழகினர்.
3