பக்கம்:குமண வள்ளல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

குமண வள்ளல்

அந்தப் பாட்டில் புலவர் தம்முடைய தாயின் நிலையையும் மனைவியின் நிலையையும் உள்ளது உள்ளபடியே சொல்லியிருந்தார். அதைக் கேட்டுக் குமணன் மிக்க இரக்கம் கொண்டான்.

இன்னும் சில நாட்கள் பெருஞ்சித்திரனார் அங்கே தங்கினார்.


குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோர் இன்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம்பழியாத்
துவ்வா ளாகிய என்வெய் யோளும்.

[குப்பையில் விளைந்த கீரையில் முன்பே பறித்த இடங்களில் மீண்டும் தழைத்த முற்றாத இளந்தளிரைக் கொய்துகொண்டு, உப்பில்லாமல் வெறும் நீரை உலையாக அடுப்பில் வேக வைத்து, மோரும் இல்லாமல், சோற்றுப் பருக்கையையே மறந்து போய், பச்சை இலையை உண்டு, அழுக்கினால் நைந்து கிழிந்த ஆடையை உடையவளாகி அறக் கடவுளைப் பழித்து, உணவின்றி இருப்பவளும் என்னை விரும்புபவளும் ஆகிய என் மனையாட்டியும்]

இது தம் மனைவியைப்பற்றிச் சொன்ன பகுதி.

உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ள லென் : உவந்து நீ
இன்புற விடுதி ஆயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டு வல்; விறற் புகழ்
வசையில் விழுத்தினைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே.

[கூரிய வேலையுடைய குமணனே! வெற்றியினால் உண்டான புகழைப் பெற்ற, குற்றம் இல்லாத சிறந்த குலத்தில் பிறந்த, புகழால் மேம்பட்ட தலைவனே! உன்னேப் பாடிய யான், முகம் காட்டாமல் திருப்தி தவிர்ந்து விடுக்கும் பரிசிலாக உயர்ந்து ஏந்திய கொம்பை யுடையதும் ப்கைவரைக் கொல்லுவதுமாகிய களிறு பெற்றாலும் கொள்ளமாட்டேன். மனம் மகிழ்ந்து இன்ப மடையும்படி விடை தந்தால் குன்றியளவானாலும் ஏற்றுக் கொள்வேன். ஆதலின் அந்த மகிழ்ச்சி உண்டாகும்படி கருணைபுரிதலே வேண்டுகிறேன்.]

இது பாட்டின் முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/40&oldid=1362558" இலிருந்து மீள்விக்கப்பட்டது