பக்கம்:குமண வள்ளல்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

குமண வள்ளல்

“ஆகாமல் அப்படியே உட்கார்ந்திருக்குமா? இன்னும் பத்து நாட்களில் பானையெல்லாம் சூனியமாகிவிடும். அதற்குமுன் நீங்கள் போய் வந்தால் நல்லது.”

புலவருக்குப் பழைய நிலை மறுபடியும் வந்துவிடப் போகிறதே என்ற அச்சம் உண்டாயிற்று. குமணனுடைய பேரன்பை நினைத்துப் பார்த்தார். எப்போது போனாலும் புலவரை அவன் அன்புடன் வரவேற்க ஆயத்தமாக இருந்தான்.

ரண்டாவது முறையும் குமணனைக் காணும் பொருட்டுப் பெருஞ்சித்திரனார் புறப்பட்டார். நன்றாகப் பழகிய இடமாதலின், நிச்சயம் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. முதிரத்தை அடைந்தார். குமணனைக் கண்டார். அவரைக் கண்டவுடனே குமணன், “என்ன காரியம் செய்தீர்கள்? இவ்வளவு காலம் என்னை அடியோடு மறந்துபோய்விட்டீர்களே!” என்று கேட்டான்.

“நான் போய்ச் சில வாரங்களே ஆயின. இது பெரிய இடையீடு ஆகுமா?” என்றார் புலவர்.

“குழந்தையையும் மனைவியாரையும் அன்னையாரையும் பார்த்துவிட்டு வருவதாகப் போனீர்கள். என்ன இருந்தாலும் புதிய நட்புப் பழைய அன்புக்கு எதிராக நிற்க முடியுமா? அங்கே போனவுடன் குழந்தைகளோடு குலாவியும் மனைவியாரோடு அளவளாவியும் தாயாரோடு உரையாடியும் பொழுது இனிதாகப் போயிருக்கும். இரண்டு மூன்று நாள் பழகிய என் நினைவு வரக் காரணமே இல்லை.”