பக்கம்:குமண வள்ளல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘எல்லோர்க்கும் கொடு’

45

புலவர், “அப்படிச் சொல்லக் கூடாது. நான் ஒவ்வொரு நாளும் மன்னர்பிரானை நினைத்துக்கொண்டே இருந்தேன். நான் உண்ணும் உணவு மன்னர் பெருமான் அளித்ததாக இருக்க, நான் எப்படி மறக்க முடியும்? நன்றியறிவு இல்லாதவனாக வாழ்வதிலும் இறந்துபடுவது நன்று என்று நினைக்கிறவன் நான்....” என்று சொல்லி வரும்போது, குமணன் இடைமறித்தான்.

“நான் உங்களை நன்றியறிவு இல்லாதவர் என்று சொல்ல வரவில்லை. இங்கே இதுகாறும் வராததற்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன், உங்கள் மனத்தில் வருத்தம் உண்டாக வேண்டுமென்று சொல்லவில்லை. இதை நீங்கள் மறந்துவிடுங்கள்.”

“நான் செய்த பிழையை உணர்கிறேன். மன்னர் பிரானை முன்பே வந்து கண்டு மகிழ வேண்டியவன் நான். என்னவோ வராமல் இருந்துவிட்டேன். மன்னர் பிரான் இதைப் பெரிதாக எண்ணக்கூடாது.”

இருவரும் ஒருவரிடம் ஒருவர் வைத்திருந்த பேரன்பினால் இப்படிப் பேசிக்கொண்டார்கள்.

“இந்த முறை என் விருப்பப்படி பல நாள் இங்கே தங்கி எனக்குத் தமிழின்பத்தை ஊட்டும் எண்ணத்தோடுதானே வந்திருக்கிறீர்கள்?”

“ஆம். மன்னர் பிரான் எப்போது, இவன் இங்கிருந்தது போதும் என்ற நினைப்போடு விடை கொடுக்க நேர்கிறதோ அப்போதுதான் போவதென்று தீர்மானித்துக்கொண்டு வந்திருக்கிறேன். என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்.”
4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/51&oldid=1357171" இலிருந்து மீள்விக்கப்பட்டது