பக்கம்:குமண வள்ளல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

குமண வள்ளல்

புலவரும் புரவலனும் பல நாள் உரையாடி இன்புற்றனர். முதிரமலைக் காட்சிகளைக் கண்டுவந்தனர். அந்தக் காட்சிகளைச் சொல்லோவியமாக்கிப் புலவர் பாடினார். அவர் பாடிய கவிதைகளைக் குமண வள்ளல் கேட்டு மகிழ்ந்தான். “பெருஞ்சித்திரனார் என்ற பெயர். உங்களுக்கு அமைந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! வண்ண ஓவியங்களில்கூட இத்தனை நன்றாகக் காட்ட முடியாது. உங்கள் கவிதை கண்ணாற் கண்டதை மாத்திரமா சொல்கிறது? கருத்தால் கருதுவதையும் சித்திரம் போலக் காட்டுகிறது” என்று பாராட்டினான். ஒவ்வொரு நாளும் மிக இனிதாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. புலவர் வந்து பல வாரங்கள் ஆயின. தாம் வீட்டை விட்டு வரும்போது மனைவி சொன்னது புலவருடைய நினைவுக்கு வந்தது. மறுபடியும் பழைய நிலை வந்துவிடக் கூடாதே என்ற அச்சம் உண்டாயிற்று. ஆனாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

குமணன் அவருடைய உள்ளக் குறிப்பை உணர்ந்துகொண்டான். சில நாட்களாகப் புலவருடைய பேச்சில் அவருடைய குடும்பத்தைப்பற்றிய செய்திகள் இடையில் வருவதை அவன் கவனித்தான். ‘இவ்வளவு நாள் இவர் இங்கே தங்கியதே பெரிய காரியம். இவரை நாம் சோதனை செய்யக்கூடாது’ என்ற எண்ணம் அவனுக்கே உண்டாகிவிட்டது. ஆதலின், புலவரை அனுப்புவதற்குரிய ஆயத்தங்களைச் செய்தான். இந்த முறை அளவற்ற பரிசில்களை வழங்கினான். ஆடையாகவும் அணிகளாகவும் அவன் வழங்கியவை பல. இரண்டு மூன்று வண்டிகள் நிறைய வாழ்வுக்குரிய பண்டங்களை நிரப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/52&oldid=1357146" இலிருந்து மீள்விக்கப்பட்டது